நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு நிருபர் மற்றும் புகைப்படக் கலைஞர் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதலுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல்


நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ் நேற்று (செப்.19) கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி தொடர்பாக தகவல்களை சேகரித்து விட்டு சேலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  அப்போது தலைவாசல் அருகே நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ் சென்ற காரை பின் தொடர்ந்து வந்த சமூக விரோத கும்பல் கார் மீதும் பிரகாஷ் மற்றும் புகைப்படக் கலைஞர் அஜித்குமார் ஆகியோர் மீதும் கடும் தாக்குதலை நடத்தினர்.


இத்தாக்குதலுக்கு ஆளான நக்கீரன் இதழின் முதன்மை சிறப்பு  நிருபர் தாமோதரன் பிரகாஷ், புகைப்படக் கலைஞர் அஜித்குமார் இருவரும் ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.


சீமான் கண்டனம்


இந்நிலையில் பத்திரிகையாளர்களைத் தாக்கி உண்மைகளை மறைக்க முயல்வதா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் முன்னதாக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இது குறித்து முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ”கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற மூத்த பத்திரிகையாளர் நக்கீரன் பிரகாசு, ஒளிப்பதிவாளர் அஜித் ஆகியோர் கொடூரமாகத் தாக்கப்பட்ட செய்தியறிந்து அதிர்ச்சியடைந்தேன்.


நாடறிந்த ஊடகமான நக்கீரனைச் சேர்ந்த பத்திரிகையாளர்களையே தாக்கி, அடக்குமுறைகளைப் பாய்ச்சி, அழுத்தங்களும் நெருக்கடிகளும் கொடுக்கப்படுகிறது என்றால், மாணவி மரணத்தில் என்னவெல்லாம் நிகழ சாத்தியப்பட்டிருக்கும் என்பதை மக்களும் நாட்டை ஆளும் ஆட்சியாளர்களும் நீதியரசர்களும் உணர்ந்துகொள்ள வேண்டும்.


 






'நேர்மையான விசாரணையை நடத்துங்கள்’


இனிமேலாவது தற்கொலை எனும் கோணத்திலேயே வழக்கின் விசாரணையைக் கொண்டு செல்லாது, நேர்மையான விசாரணையை நடத்தி, தொடர்புடைய குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் எனவும், நக்கீரன் பத்திரிகையாளர்களைத் தாக்கியவர்களை கண்டறிந்து கடும் சட்டத்தின் கீழ் சிறைப்படுத்த வேண்டும் எனவும் தமிழ்நாடு அரசை கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.


இந்த தாக்குதல் சம்பவத்துக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சமூக விரோத கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தியுள்ளது.


 






அண்மைக்காலமாக பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் பழிவாங்கும் போக்கு அதிகரித்து வருவதை காண முடிகிறது. இது ஒரு ஆரோக்கியமான போக்காக இருக்காது என்பதை ஆட்சியாளர்களும் காவல்துறையினரும் உணர வேண்டும் .பத்திரிகையாளர்களை தாக்குகின்ற சமூக விரோத கும்பலாக இருந்தாலும் சரி அரசியல்வாதிகளாக இருந்தாலும் சரி அவர்கள் மீது சட்டபூர்வ உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


முதலமைச்சரிடம் கோரிக்கை


பத்திரிகையாளர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பதற்குரிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும் உரிய பாதுகாப்பினை வழங்க வேண்டும் என்பதுதான் அனைத்து பத்திரிகையாளர்களின் வேண்டுகோளாக உள்ளது. பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோத  கும்பலை உடனடியாக கண்டறிந்து அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதோடு தாக்குதலுக்கு ஆளாகி சிகிச்சை பெற்று வரும் பத்திரிகையாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கி அவர்களுக்கு தேவையான உதவிகளையும் அரசு தரப்பு செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம்  ஒட்டுமொத்த பத்திரிகையாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.