தீண்டத்தகாத சாதி எது  என்று மதுரை தனியார் பள்ளியில் கேட்கப்பட்ட 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கேள்வியால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. 


மதுரையில் செயல்பட்டு வரும் தனியார் சிபிஎஸ்இ பள்ளியில், பருவத் தேர்வு நடந்து வருகிறது. இதில்  6ஆம் வகுப்பு,  சமூக அறிவியல் பருவத் தேர்வு நேற்று (செப். 19ஆம் தேதி) நடைபெற்றது. 


இந்த கேள்வித் தாளில் மும்பை மாகாணத்தில் தீண்டத்தகாத சாதியாக இருந்தது எது என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


எனினும் என்சிஇஆர்டி பாடத்திட்டத்தை அடிப்படையாகக் கொண்டே, கேள்வி கேட்கப்பட்டதாகப் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. 






முன்னதாக, சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் (Periyar University)  கல்வி ஆண்டிற்கான செமஸ்டர் தேர்வு நடைபெற்றது. அன்ந்தத் தேர்வில் முதுகலை வரலாற்றுத் துறையின் தமிழ்நாடு விடுதலை பாடத்தில் கேட்கப்பட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் தமிழ்நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட சாதி எது? என்ற கேள்வி இடம்பெற்றிருந்தது. இதுபற்றிக் குழு அமைத்து விசாரித்து, தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 




 


சாவர்க்கர் பற்றி கர்நாடக பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ள குறிப்புகளால் சர்ச்சை கிளம்பியுள்ளது. கர்நாடக மாநில 8 ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் சாவர்கர் பற்றி ஒரு குறிப்பு உள்ளது. அதில், ’சாவர்க்கர் அடைக்கப்பட்டிருந்த அறையில் ஒரு சாவித் துவாரம் கூட இல்லை.


ஆனால், அங்கு புல்புல் பறவைகள் தினமும் வந்து செல்லும். அந்தப் பறவையில் மீதேறி அன்றாடம் தாய்நாட்டிற்கு சாவர்க்கர் வந்து செல்வார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வார்த்தைகளை சுட்டிக்காட்டி வரலாற்றில் இல்லாத ஒன்றை புனைவாக பாடப்புத்தகத்தில் கூறலாமா?’ என்று கேள்வி எழுப்பினர். இதுவும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. 


சாவர்க்கர் புல்புல் பறவை மீதேறி பறந்தார் என்ற கருத்தைக் குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினர் கிண்டல் பதிவுகளையும், கேலி மீம்ஸ்களையும் பகிர்ந்தனர். 


இந்த நிலையில் பள்ளி, கல்லூரிகளில் தேர்வுகளின்போது கேள்வித் தாள்கள் சர்ச்சைக்குரிய வகையில் அமைக்கப்படுவதும், அவை விவாதத்துக்கு உள்ளானபிறகு நிர்வாகங்கள் விளக்கம் அளிப்பதும் தொடர் கதையாகி வருவது குறிப்பிடத்தக்கது.