ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கடலோர கிராமமான வெள்ளரி ஓடையில் பனைமரக் காடுகள் சூழ்ந்திருக்கும் ஒதுக்குப்புறமாக தனி வீட்டில் மனைவி கலாதேவி மற்றும் இரண்டு மகள்களோடு வசித்து வருகிறார் பார்வை மாற்றுத்திறனாளி முருகாண்டி.



பார்வை இல்லாதபோதிலும் பனைமரம் எப்படி ஏறுகிறீர்கள் என்று அவரிடம் பேசினோம்...


‘பிறவியிலேயே பார்வை கிடையாது. அப்பாவும், சிறுவயதிலேயே எங்களை விட்டுப் பிரிந்து இலங்கையில் போய் நிரந்தரமாக தங்கிவிட்டார். அம்மாதான் பாய், கூடை முடைந்து கஷ்டப்பட்டு என்னை வளர்த்துச்சு’. எங்க ஊரைச் சுத்தி பனங்காடுகளா இருந்ததால, சின்ன வயசுலயே எனக்கு பனை மரம் ஏற, நுங்கு சீவ, பாய் முடைய, ஓலை கிழிக்க,வேலி அடைக்க, அம்மா பழக்கினாங்க.


 



10 வயதில் இருந்து அம்மாவுடன் வேலைக்கும் போக ஆரம்பிச்சேன். எனக்கு இருந்த வைராக்கியம் தான் என்ன பனை மரம் ஏற தூண்டுச்சு. நமக்கு கண்னுதான தெரியல மரத்துல இருந்து கிழே விழுந்தா கை, கால்தான உடையும். என்ன ஆனாலும் பாத்துக்கலாம்னு பனை மரம் ஏற ஆரம்பிச்சேன்.


அதுக்கு பின்னாடி அம்மாவுக்கும் வயசு போயிடுச்சு என்னை கவனிக்க முடியால, எங்க மாமா வீட்ல பெண் இருந்துச்சு. அத்தை வீட்ல பொண்னு இருந்துச்சு. ஆனா யாரும் எனக்கு பெண் கொடுக்க முன் வரல. அப்பறம் என் மனைவி என்னோட தன்னம்பிக்கையை பாத்து கல்யாணம் பண்ணிகிட்டா. இப்ப, என்னோட ரெண்டு புள்ளைகளும் சில நல்ல மனுசங்க உதவியோட படிக்குதுங்க.


ரெண்டு புள்ளைகளையும் ஏன் இவ்வளவு சிரமப்பட்டு  படிக்க வைக்குற? பேசாம, அவங்களையும் வேலைக்கு அனுப்பிடுன்னு ஊர்க்காரங்க சொன்னாங்க. பார்வையில்ல,  நான்தான் படிக்காம போயிட்டேன்.ஆனா நம்ம புள்ளைகள படிக்க வெச்சு பெரிய ஆளாக்கிடணுங்கிற வைராக்கியத்துல படிக்க வெக்கிறேன்


1977ஆம் வருசத்துல ஒரு நாள் ஓலை வெட்ட பக்கத்து ஊருக்கு போயிருந்தேன் அப்ப ஒரு வளஞ்ச மரத்துல தெரியாம ஏறிட்டேன். திடீர்னு நெஞ்சுல மரம் அடிச்சதுல மரத்துல இருந்து எப்படி கீழ விழுந்தேன்னு தெரியல. ஆண்டவன் புண்ணியத்துல உயிர் தப்பிச்சேன். அது தான் முதல் முறை மரத்துல இருந்து விழுந்தது. அப்புறம் ரெண்டு தடவ மரத்துல இருந்த விஷ குளவி கடிச்சதால, கொஞ்ச நாள் மரம் ஏறாம இருந்தேன். அப்புறம் சரியானதும்  மரம் ஏற ஆரம்பிச்சுட்டேன்.



நான் யார்கிட்டையும் வேண்டா வெறுப்பா நடந்துக்க மாட்டேன். அதுனால என்ன ரொம்ப பேரு விரும்பி பனை ஓலை வெட்ட வேலைக்கு வந்து கூட்டிட்டு போவாங்க. சில நேரம் ஒரே நாள்ல வீட்டுக்கு வந்துருவேன். சில நேரம் வீட்டுக்கு வர நாலு நாள் அஞ்சு நாள் கூட ஆகும். அப்பல்லாம் பனை மரம் நெறய இருந்துச்சு. நல்லா வருமானம் கிடைச்சது. இப்ப பனை மரம் இல்லை. வருமானம் இல்லை. அதனால அரசு நூறு நாள் வேலைக்கு போயிட்டு இருக்கேன். இப்போ எப்பவாச்சும் யாராவது பனை ஏற கூப்பிட்டா போவேன்,” என தழுதழுத்த குரலில் சொன்னார் முருகாண்டி.


அவரோட மனைவி கலாதேவி நம்மிடம்பேசும்போது...


இவ்வளவு நாள் ஓலை வெட்டிதான் எங்கள காப்பத்திட்டு வந்தாரு. எங்க புள்ளைகளையும் படிக்க வச்சாரு. அதுக்கு அப்புறம் கொஞ்ச பேர் கிட்ட உதவி கேட்டுதான் புள்ளைகள படிக்க வச்சுட்டு வர்ரோம். வீட்டுல சும்மாவே இருக்க மாட்டாரு ரேடியோல பாட்டு கேக்குறது, டிவில செய்தி கேக்குறதுன்னு எதாவது செஞ்சுட்டே இருப்பாரு. நாம எத சொன்னாலும் காதுல வாங்கிக்க மாட்டாரு. வீட்ல இருக்குற கரண்டு வேலை எல்லாம் அவருதான் பாப்பாரு.


பக்கத்து ஊர்களுக்கு அவரே பஸ்ல போயிட்டு வந்துடுவாரு. ஆனா தொலைவா போகணும்னா நாமதான் கூட்டிட்டுபோகனும். ஓலை வெட்ட சில நேரம் அவங்களே கூட்டிட்டு போயிட்டு திரும்பி வந்து வீட்ல விட்டுருவாங்க. இல்லைன்னா நானே கையில புடிச்சி கூட்டிட்டுபோவேன்” என்றும் தெரிவித்தார் அவர் மனைவி கலாதேவி.


“நான் வீட்டில் பாய் முடைவேன். ஆனா நிறைய பனை மரங்களை வெட்டுனதால அவருக்கு பனை மரம் ஏற வாய்ப்பு இல்லை. எனக்கு பாய் முடையவும் வாய்ப்பில்லை. ரொம்ப கஷ்டப்படுகிறோம். மாற்று தொழில் ஏதாவது கத்துக்கிட்டாதான் வாழ்கையை ஓட்ட முடியும்” என்றும் கவலை தோய்ந்த முகத்தோடு  சொன்னார் கலாதேவி.


கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக எல்லாம் அந்த பகுதியில் அதிக பனை மரங்கள் இருந்தன தற்போது விறகுக்காக பனை மரங்கள் வெட்டப்பட்ட நிலையில் தொழிலின்றி வருவாய் இழந்து வறுமையில் வாடி வரும் இந்த பார்வையற்ற பனை தொழிலாளரின் குடும்பம் அரசின் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது.