தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்க பாண்டியன் அவர்கள் பலருக்கும் ஃபேவரெட்.  எழுத்து, இலக்கியம் , அரசியல் என பிஸியாக இருக்கும் இவர் , தனது தோற்றத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பவர். இது குறித்து பல விமர்சனங்கள் பொதுவெளியிலும் , சமூக வலைத்தளங்களிலும்  முன்வைக்கப்படும் சூழலில் அதற்கு அவரே நேர்காணல் ஒன்றில் பதிலடி கொடுத்திருக்கிறார்.   அதனை தனது சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறார். 




அந்த வீடியோவில் ”தமிழர்களே அழகுணர்ச்சி மிக்கவர்கள்தான். ஒரு அழகுநிலையத்துக்கு போய்தான் உங்களை அழகுப்படுத்திக்கனும்னு கிடையாது. வீட்டுல அரைக்குற தோசை மாவுதான் உங்களுக்கு சிறந்த ஸ்க்ரெப்பர். அதே போல பால் காய்ச்சும் பொழுது வரும் , பாலாடைகளை முகத்தில் பூசிக்கொண்டு யோகா, உடற்பயிற்சி, தோட்டவேலை போன்ற வேலைகளை செய்தாலே போதுமானது.  ஒரு பெண் பொதுவாழ்க்கைக்கு வந்துவிட்டால் குறிப்பாக அரசியலுக்கு வந்துவிட்டால் அவர்கள் தங்கள் தோற்றத்தில் கவனம் கொள்ளக்கூடாது என்பார்கள். என்னை பல பேர் , இவங்க என்ன எம்.பி ஆக இருக்குறாங்க . அதன் பிறகும் தலையில பூ வச்சிருக்காங்க. இவங்க என்ன எம்.பி.ஆக இருக்கிறாங்க அதன் பிறகும் மேட்சிங்காக வளையல் போடுறாங்க என்பார்கள். எம்.பி ஆயிட்டா என்ன ..... உங்கள் கலை உணர்ச்சி , அழகுணர்ச்சி எல்லாத்தையும் விட்டுவிட வேண்டுமா ? எதற்காக விட வேண்டும். நான் ஆடம்பரமாக ஆடை அணியவில்லை. என்னை வைரத்தால் அலங்கரித்துக்கொள்ளவில்லை. நான் அணிவது அனைத்துமே கைத்தறி மற்றும் கைவினை கலைஞர்களால் செய்யப்பட்டது . மலர்களால் , சந்தனத்தால் உங்களை அலங்கரிப்பதும் நேர்த்தியாக வைத்துக்கொள்வதும் தமிழர்களின்  வாழ்க்கை முறை.  நிறைய பேர் சொல்லுவாங்க. இவங்களுக்கு மேக்கப் போடவே டைம் சரியா இருக்குமே , இவங்க எப்படி பொது பிரச்சனைக்கு போவாங்க என அதில் உங்களுக்கு என்ன பிரச்சனை. நான் பொது பிரச்சனைக்கு 6 மணிக்கு போக வேண்டுமென்றால் 4.30 மணிக்கெல்லாம் எழுந்துக்கொள்ள போகிறேன். நான் என்னை நேர்த்தியாக  வெளிப்படுத்துவது எனக்கு மிகவும் பிடித்த விஷயம் . நான் மற்றவர்களுக்காக அதை செய்வதில்லை. எனது மகிழ்ச்சிக்காக செய்கிறேன் “ என தெரிவித்துள்ளார்.