தமிழகத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வசூல் மற்றும் செட்டில்மெண்ட் அரசியல் செய்து வருகிறார் என காங்கிரஸ் எம்.பி., ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.


 


 




 


அதிமுக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் கரூர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீதுள்ள ஊழல் வழக்கில் விசாரணைக்கு  அனுமதி வழங்காமல் இருக்க அண்ணாமலை மூலம் ஆளுநருக்கு ஆதாயம் இருக்கிறது.? என சந்தேகம் உள்ளது. இதை ஆளுநர் மக்கள் மத்தியில் விளக்கம் அளிக்க வேண்டும் என கூறியுள்ளார். கரூரில், உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் எம்பி ஜோதிமணி செய்தியாளர்களை சந்தித்தார்.


அப்போது, அவர் கூறுகையில், ”அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், சி.வி. ரமணா, எம்.ஆர்.விஜயபாஸ்கர், வீரமணி,  உள்ளிட்ட நான்கு பேர்கள் மீதுள்ள ஊழல் வழக்கை விசாரிக்க அனுமதி கோரியிருந்த நிலையில், இதற்கு அனுமதி வழங்காமல் கோப்புகளை ஆளுநர் கிடப்பில் போட்டிருந்தார். தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் சி.விஜயபாஸ்கர், சி.வி. ரமணா ஆகியோர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க ஆளுநர் ஒப்புதல்  வழங்கியுள்ளார். கரூரைச் சேர்ந்த முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்கு கோப்புகள் எதுவும்  வரவில்லை என்று ஜூலை 6-ஆம் தேதி ஆளுநர் தெரிவித்திருந்தார். தற்போது, உச்சநீதிமன்றத்தை அணுகிய நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்கு  விசாரிக்க அனுமதி கோரிய கோப்பு கடந்த மே 15ஆம் தேதி வந்தது என கூறியுள்ளார். ஏன் இவ்வாறு பொய்யான தகவலை ஆளுநர் கூறவேண்டும்.


 




 


கரூர், எம்.ஆர் விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்கை விசாரிக்க அனுமதி வழங்குவதில் ஆளுநர் ஏன் இது போன்ற முரண்பட்ட தகவல்களை அளித்துள்ளார். இதில், என்ன  மர்மம் உள்ளது என தெரியவில்லை.? அதிமுகவில் உள்ள மற்ற முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்க அனுமதி வழங்கிய போதும் கூட, கரூரில் உள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதுள்ள ஊழல் வழக்கு  விசாரணைக்கு ஆளுநர் அனுமதி அளிக்காதது ஏன்? கடந்த ஆட்சிக் காலத்தில் 2017,  18, 19, 2020 ஆகிய ஆண்டுகளில் எம்.ஆர் விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர், அவரது மனைவி பெயரில்  பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் வாங்கி உள்ளனர். பல கோடிகள் மதிப்புள்ள சொத்துக்களை லட்சக்கணக்கில் மதிப்பீடு செய்து வாங்கப்பட்டுள்ளது.  இதில் கோவை சாலையில் உள்ள பிரபலமான எல்ஜிபி பெட்ரோல் பங்க் உடன் 5430 சதுர அடி இடத்தை வாங்கி உள்ளனர். இந்த சொத்து விற்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் மதிப்பு என்ன? அந்த பணம் தற்போது எதில் முதலீடு செய்யப்பட்டுள்ளது? என்பது தெரிய வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு நேர்மையற்ற ஊழல் அரசியல்வாதி என விமர்சனம் செய்தால், பாஜகவினரை விட கரூரில் உள்ள அதிமுகவினருக்கு ஆத்திரம், கோபம் வருகிறது ஏன்?


 


 




 


 


அண்ணாமலை மீது குற்றம் சாட்டினால் அதிமுகவிற்கு ஏன் வலிக்கிறது.? அண்ணாமலைக்கும், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும் இடையே அண்டர்ஸ்டேண்டிங் அரசியல் நடந்து வருகிறது.  அண்ணாமலை கோவையில் உள்ள லூலு மால் கட்டடம் கட்டும்போது ஒரு செங்கல் கூட வைக்க முடியாது என கூறினார். தற்போது இதை எதிர்த்து ஒரு ஆர்ப்பாட்டம் கூட  நடத்தவில்லை ஏன்? இந்த நிலையில் அந்த இடத்திற்கு ரயில்வே நிலம் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அண்ணாமலை வசூல் மற்றும் செட்டில்மெண்ட் அரசியல் செய்து வருகிறார். எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கும்- அண்ணாமலைக்கும் இடையே அண்டர்ஸ்டாண்டிங் மற்றும் டீலிங் அரசியல் நடந்து வருகிறது. இதனால், தான் எம். ஆர். விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்கு விவகாரத்தில் ஆளுநர் அமைதி காத்து வருகிறார். எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல் வழக்கில் விசாரணைக்கு  அனுமதி வழங்காமல் இருக்க அண்ணாமலை மூலம் ஆளுநருக்கு ஆதாயம் இருக்கிறதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கு ஆளுநர் மக்கள் மத்தியில் விளக்கம் அளிக்க வேண்டும்” என பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்துள்ளார்.