Kalaignar Womens Assistance Scheme:  மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது என முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த திட்டம் மறைந்த  முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த தினமான செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி நடைமுறை படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்திற்காக 2023 - 24 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கலைஞரின் நூற்றாண்ட்டையொட்டி இத்திட்டத்திற்கு இப்பெயர் சூட்டப்பட்டுள்ளது என குறிப்பிட்டார். 


இந்த திட்டத்திற்கான பயனாளருக்கான தகுதிகள்:


அதன்படி, ”மகளிர் உரிமைத்தொகையை பெற விரும்பும் பயனாளிகளுக்கு 21 வயது நிரம்பியிருக்க வேண்டும். மகளிர் உரிமைத் தொகைக்கும் விண்ணப்பிக்கும் மகளிர் தமிழ்நாட்டில் வசிப்பவராக இருத்தல் அவசியம். ஆண்கள் தலைமையில் குடும்பம் இருந்தாலும், அக்குடும்பத்தில் உள்ள பெண் குடும்பத்தலைவியாக கருதப்பட்டு அவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்பட்டது. அதே நேரம், உச்ச வயது ஏதுமில்லை.


யாருக்கெல்லாம் உரிமைத்தொகை இல்லை: 


ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே மகளிர் உரிமைத்தொகை வழங்க அரசு முடிவு. சொந்தமாக கார், டிராக்டர், ஜூப், கனரக வாகனம் வைத்திருப்போர், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக கொண்டிருப்போருக்கு ரூ.1000 உரிமைத்தொகை கிடையாது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்திற்கும் மேல் வருவாய் பெறும் குடும்ப தலைவிகளுக்கு உரிமைதொகை கிடைக்காது. 5 ஏக்கர் மற்றும் அதற்கும் அதிகமான நன்செய் நிலம் வைத்து இருக்கும் குடும்ப தலைவிகளுக்கும், 10 ஏக்கர் புன்செய் மற்றும் அதற்கு அதிகமான நிலம் வைத்திருக்கும் குடும்பத்தலைவிகளுக்கு உரிமைத் தொகை இல்லை. பெண் எம்.எல்.ஏ., எம்.பி. மற்றும் பெண் அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியம் பெறுபவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது. மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் மட்டும் இல்லாமல், பொதுத்துறை நிறுவனங்களான வங்கிகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள் மற்றும் அவற்றின் ஓய்வூதியதார்களுக்கு இத்திட்டத்தின் கீழ் உரிமைத் தொகை வழங்கப்படமாட்டாது. வருமானவரி செலுத்துவோர், அரசின் வேறு நிதி உதவித் திட்டங்களில் பலன் பெறும் மகளிர் இந்த திட்டத்தில் பலன் பெற முடியாது. ஆண்டுக்கு 3600 யூனிட்க்கும் அதிகமான மின்சாரத்தை நுகர்வு செய்யும் குடும்பங்களுக்கு உரிமைத் தொகை கிடையாது.


திருநங்கைகள், திருமணமாகாதவர்கள், தனித்து இருப்போர், கைம்பெண்கள்  தலைமையில் குடும்பம் இருந்தால் அவர்கள் குடும்பத்தலைவிகளாக கருதப்பட்டு அவர்களுக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதே நேரத்தில், கடும் உடல் குறைபாடு உடைய மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை பெறும் குடும்பங்கள் இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். 


எந்த ரேஷன்  கடையில் குடும்ப அட்டை உள்ளதோ, அந்த கடையில் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மகளிருக்கு மாதம் ரூபாய் ஆயிரம் உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பின்னர், முதலமைச்சர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளதாவது, 


வீட்டு வேலையும் செய்து விட்டு வெளியிலும் வேலைக்குச் செல்லும் விளிம்பு நிலையில் உள்ள பெண்களுக்கு பயன்படும் வகையில் அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தப்படுவுள்ளது. ஏற்கனவே 2023ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இத்திட்டத்திற்கான நிதி ரூபாய் 7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது. இந்த திட்டத்தினை சீரிய முறையில் நடைமுறைப்படுத்த மாவட்ட ஆட்சியர்கள் கவனமாக செயல்படவேண்டும். இதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தவேண்டும். இந்த திட்டம் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரை பிறந்த நாளான, செப்டம்பர் மாதம் 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளதால்,  இரண்டு மாத காலம் தான் இருப்பதால் அதிகாரிகள் சீரிய முறையில் பணியற்ற வேண்டும். ஒன்றரை கோடி விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுவதால், அதிகாரிகள் முகாம்கள் நடத்தும் போது, பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும் என  முதலமைச்சர். மேலும் அவர், இந்த திட்டத்தில் பயன்பெற தேவைப்படும் ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகியவை இல்லாவிட்டாலும், அவர்களுக்கு ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டைகளை பெற்றுத் தந்து மக்களை பயனடையச் செய்யவேண்டும் என முதலமைச்சர் அறிவுருத்தியுள்ளார்.