வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ ஜூன் 22 ஆம் தேதி, தமிழகத்தில்  ஒருசில  இடங்களிலும்,   புதுவை     மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்  இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


அதேசமயம் இன்று காலை 10 மணி வரை நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னையில் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. 






மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


ஜூன் 22 ஆம் தேதி மன்னார்  வளைகுடா  மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அதேபோல் தெற்கு வங்கக்கடல்  மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேலும் லட்சதீவு பகுதிகள்,  கேரள - கர்நாடக கடலோரப்பகுதிகள்,  தென்கிழக்கு மற்றும் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னையில் வானிலை நிலவரம் 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில  பகுதிகளில் மாலை / இரவு வேளையில்,  இடி மற்றும் மின்னலுடன் கூடிய  லேசானது / மிதமான மழை  பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25°-26° செல்சியஸை ஒட்டியும்  இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.