பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் வடகிழக்கு பருவமழை காலத்தில் வெள்ள தடுப்புப் பணிகளிலும், மாண்டஸ் புயலின் போது சிறப்பாகப் பணிபுரிந்த சென்னை மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு முதலமைச்சர் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். சென்னை ரிப்பன் மாளிகையில் நடைபெற்ற நிகழ்வில் ஆணையர் முதல் தூய்மைப் பணியாளர்கள் வரை சான்றிதழ் பெற்றனர்.


மாநகராட்சி மற்றும் குடிநீர் வாரியம் பணியாளர்கள் என 500க்கும் மேற்பட்டவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. பருவமழையை கையாண்டது குறித்த ஆவணப்படத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், மேயர், துணை மேயர், சட்டமன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


"மழைநீர் தேங்கவில்லை என்ற நிலையை உருவாக்கினோம்"


பின்பு, மேடையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "என்ன மழை பெய்தாலும் தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்ற சூழலை உருவாக்கி மிகப்பெரிய சாதனை படைத்தோம். கடந்த முறை சென்னையில் தண்ணீர் தேங்கிய இடங்களில் இந்த முறை தண்ணீர் தேங்கவில்லை. சென்னையில் எந்த இடத்திலும் மழை நீர் தேங்கவில்லை என்ற செய்தி கேட்டு பெரும் மகிழ்ச்சி அடைந்தோம்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.


"ஆட்சிக்கு வந்து 2 சாதனை படைத்தோம்"


இதனை தொடர்ந்து பேசிய அவர், "திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இரண்டு முக்கிய சாதனைகளை படைத்துள்ளோம். கொரோனோவை கட்டுப்படுத்தினோம், மழை வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம். மேயராக இருந்ததால் சென்னையில் ஒவ்வொரு வார்டும் எனக்கு தெரியும், ஒவ்வொரு தெருவும் எனக்கு தெரியும். ஒரு நிகழ்வு நடந்த உடனேயே அங்கே  செல்ல வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும் என்ற உணர்வு ஏற்பட காரணம் கலைஞர்தான்” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு


மேலும், "துப்புரவு பணியாளர் என்ற சொல்லை தூய்மை பணியாளர் என்று மாற்றிவர் கலைஞர் தான். மழை, வெள்ள காலத்தில் தூய்மைப் பணியாளர்களின் பணி மிகவும் பாராட்டுக்குரியது, மகத்தானது. அனைவரையும் ஒருங்கிணைந்து எல்லோருக்கும் எல்லாம் என செயல்படுவதுதான் திராவிட மாடல் ஆட்சி” என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.


இதனை அடுத்து, ”சென்னையில் மழைக் காலத்தில் மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் ஆற்றிய பணி மகத்தானது. அவர் மட்டுமின்றி மேயர் பிரியாவும் சிறப்பாக பணியாற்றினார். பணிகளை திறம்பட செய்வதில் அமைச்சர் நேருவுக்கு நிகர் நேரு மட்டுமே. அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர்பாபுவும் இரவு பகல் பாராமல் மழைக் காலங்களில் பணியாற்றி உள்ளார்கள்” என்று கூறினார்.


"பெருமையாக கருதுகிறேன்”


”மழை வெள்ள காலங்களில் தடுப்பு பணிகளில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு பாராட்டு விழா நடத்துவதில் பெரு மகிழ்ச்சியடைகிறேன். இனி வரக்கூடிய காலங்களில் சென்னை மாநகராட்சிக்கு நிரந்தர தீர்வு உருவாக்க முடிவு செய்து ஓய்வுபெற்ற அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. மக்களுடைய மகிழ்ச்சியே நம் இலக்கு" என்றார்.


”அதை நோக்கியே நாம் பணியாற்றி வருகிறோம் . எனக்கு எத்தனையோ பாராட்டு விழாக்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் அதையெல்லாம் விட இந்த விழாவை தான் பெருமையாக கருதுகிறேன்"  என்று முதலமைச்சர் ஸடாலின் பேசியுள்ளார்.