குறுகிய காலகட்டத்தில் நிவாரண உதவிகளை விரைந்து வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக வெள்ள பாதிப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது அதிகாரிகளுக்கு பல அறிவுரைகளை வழங்கினார். அதில், “குறுகிய காலகட்டத்தில் நிவாரண உதவிகளை விரைந்து வழங்க வேண்டிய சவாலான சூழலில் உள்ளோம். வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டோரை உடனடியாக மீட்டு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும். தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களின் பல பகுதிகளில் மக்கள் இன்னமும் வெள்ள நீரில் சிக்கியுள்ளனர்.





ராணுவம், NDRF, SDRF ஆகியவற்றுடன் இணைந்து தீயணைப்புத் துறை, காவல்துறை, வருவாய்த்துறையினர் களப்பணியாற்ற வேண்டும். தேவையான இடங்களில் புதிய முகாம்களை இணைக்க வேண்டும். சென்னையில் செயல்பட்டது போன்று முனைப்புடனும் ஒருங்கிணைப்புடனும் செயல்பட வேண்டும்” என அறிவுறுத்தினார். 


நெல்லை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக கொட்டி தீர்க்கும் கனமழையால் 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து நெல்லை வெள்ள பாதிப்புகளை பார்வையிட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உட்பட கூடுதல் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.  எனவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்து மாநகரில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார் தொடர்ந்து முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு அமைச்சர் உதயநிதி உதவிகளை வழங்கினார். பின்னர் மாநகராட்சி அலுவலகத்தில் வைத்து அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின் தங்கம் தென்னரசு ஆகியோர் செய்தியாளர்களுக்கு கூட்டாக அளித்த பேட்டியில்,
நெல்லையில் மிக கனமழை பெய்த காரணமாக மிகுந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பொறுப்பு அமைச்சர்கள் அரசு அதிகாரிகள் களத்தில் இருந்து மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை செய்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் இருப்பவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 3500 பேர் நேற்று காலை முதல் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு தேவையான உணவு போன்ற வசதிகள் செய்து கொடுத்துள்ளோம் சில இடங்களில் மழை அதிகமாக பெய்தது சிலர் வீடுகளிலே இருப்பதாக தெரிவித்தனர். அவர்களுக்கும் சாப்பாடு கொடுப்பதற்கு படகு வசதி ஏற்பாடு செய்துள்ளோம். 


என்னையும் சக அமைச்சர்களையும் மழை பாதிப்புகளை ஆய்வு செய்ய முதல்வர் இங்கு அனுப்பியுள்ளார். நாங்கள் மீட்பு பணியில் தயார் நிலையில் இருக்கிறோம். நேற்றை விட இன்று மழை குறைந்துள்ளது. தண்ணீரும் வடிய தொடங்கியுள்ளது. இதுவரை மாவட்டத்தில் வெள்ளத்தினால் 3 பேர் உயிரிழந்துள்ளனர். நெல்லை சந்திப்பு, சிந்துப்பூந்துறை பகுதியில் படகு மூலம் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம். அளவுக்கு அதிகமாக படகுகள் கொண்டுவரப்பட்டுள்ளது. 36 கிராமங்கள் மற்றும் இரண்டு பேரூராட்சிகள் மழை வெள்ளத்தால் நெல்லையில் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் குளங்கள் உடைந்திருப்பதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் மழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளதால் தாழ்வான பகுதிகளில் இருக்கும் மக்கள் முடிந்தவரை வெளியே வரவேண்டும். நெல்லையில் கால்வாய்கள் தூர் வாரும் பணிகள் ஏற்கனவே நடைபெற்று விட்டது. அடுத்த கட்டமாக கான்கிரீட் போடும் பணிகள் மட்டுமே நடைபெற இருக்கிறது. கால்வாயில் தற்போது பிரச்சனை இல்லை. முதல்வர் நாளை டெல்லிக்கு சென்று பிரதமரிடம் நிவாரணம் கேட்க உள்ளார். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் இந்த மாவட்டத்திற்கு தேவையான நிவாரணத்தையும் முதல்வர் அறிவிப்பார்.  பொதுமக்களுக்கு பால் கிடைப்பதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் இது குறித்து அறிவுறுத்தியுளளோம். பத்தாயிரம் லிட்டர் பால் கூடுதலாக கொண்டுவரப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.