கடலூர் மாவட்டம் ஆல்பேட்டை குண்டுசாலை பகுதியைச் சேர்ந்த முபாரக் அலி மகள் ஆபிதா (22) என்பவர் கடந்த 12ஆம் தேதியில் காணவில்லை என பெற்றோர் கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார்  கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வந்தனர்.

 

இந்நிலையில், காணாமல் போன இளம்பெண் காதல் கணவருடன் பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார்.

 

இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் புதுப்பேட்டை அடுத்துள்ள சிறுவத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை என்பவரது மகன் புஷ்பராஜ் (24) பண்ருட்டியில் உள்ள இருசக்கர வாகனம் விற்பனை ஷோரூமில் பணியாற்றி வந்த நிலையில் கடலூரைச் சேர்ந்த ஆபிதாவுக்கும் புஷ்பராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டு 4 வருடங்கள் நட்பாக பழகி வந்த நிலையில் கடந்த ஓராண்டாக காதலித்து வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் கடந்த 12ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய ஆபிதா சிறுவத்தூரில் உள்ள தனது காதலன் புஷ்பராஜை தேடி சென்று உள்ளார். இதனை அடுத்து காதல் ஜோடி இருவரும் விழுப்புரம் அடுத்த மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் கடந்த 12-ந் தேதி இந்து முறைப்படி திருமணம் செய்து கொண்டு 3 நாட்களாக அங்கேயே தங்கி உள்ளனர்.

 

பின்னர் பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட இருவரும் பாதுகாப்பு கேட்டு புதுப்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். 

 

காவல்துறையினர் நடத்திய விசாரணைக்கு பின்னர் கணவருடன் செல்ல சம்மதித்ததால் ஆபிதாவை தனது காதல் கணவர் புஷ்பராஜுடன் போலீஸ் பாதுகாப்போடு சிறுவத்தூர் கிராமத்திற்கு அனுப்பி வைத்தனர்.

 

பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடி இருவர் காவல் நிலையத்தில் தஞ்சம் அடைந்த சம்பவம் புதுப்பேட்டையில் பரபரப்பு ஏற்படுத்தியது.