தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரியும் பெண் காவலர்கள், மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும்போது, குழந்தையை பராமரிக்க ஏதுவாக அடுத்த 3 ஆண்டுகளுக்கு கணவர் மற்றும் பெற்றோர் வசிக்கக்கூடிய பகுதிகளில் பணிபுரியலாம் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


"எல்லாத்துறைகளும் என் துறைதான்" சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடைபெற்ற பதக்கம் வழங்கும் விழாவில் பேசிய முதலமைச்சர், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். நிகழ்ச்சியில் விரிவாக பேசிய அவர், "முதலமைச்சர் என்ற முறையில் தினமும் பல்வேறு துறைகள் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். இன்று காவல்துறை சார்பாக நடக்கும் விழாவில் பங்கெடுக்கிறேன் என்று சொன்னால் என்னுடைய துறையின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால், கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைகிறேன்.


எல்லாத் துறைகளும் என்னுடைய துறைகள்தான். இருந்தாலும், காவல்துறையினர் என்னை அதிகம் உரிமை கொண்டாடிக் கொள்ள முடியும் என்பதுதான் உண்மை. என் துறையைச் சேர்ந்த காவலர்கள் பல்வேறு பதக்கங்களை பெற்றிருப்பதை பார்க்கும்போது நான் பதக்கம் வாங்கியதுபோல எனக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.


இந்தப் பதக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பும், திறமையும் தலைவணங்கத்தக்க அம்சமாகும்! தமிழ்நாடு பெருமைமிகு மாநிலமாக திகழ்கிறது என்றால், அந்தப் பெருமையில் தமிழ்நாடு காவல்துறைக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அமைதியான மாநிலத்தில்தான் வளமும் வளர்ச்சியும் இருக்கும்.


கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மனித வளர்ச்சிக் குறியீடுகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இத்தகைய பெருமையை அரசுக்கு உருவாக்கித் தரும் காவலர்கள் எல்லோருமே பதக்கங்களுக்கு தகுதி படைத்தவர்கள்தான்.


ஆண்டுதோறும் அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் எல்லாருக்கும் மிகப்பெரிய ஊக்கம் அளிப்பதாக அது அமைந்திருக்கிறது. சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் பணியில் அர்ப்பணிப்போடு செயல்படும் காவல் அதிகாரிகளையும், காவல் ஆளிநர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன். இதுபோன்ற பதக்கங்கள் வழங்கப்படுவதும், அதற்காக விழா நடத்துவதும், இதுபோன்ற பதக்கங்களை மற்றவர்களும் பெற வேண்டும் என்ற வாக்கத்தை அளிக்கத்தான்.


கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற நெறிகளைப் பின்பற்றி அல்லும் பகலும் உழைத்தால், அவர்கள் போற்றப்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உங்கள் கடமையை நீங்கள் செய்தால், அதற்கான பாராட்டும் பலனும் உங்களை தேடி வந்து சேரும். அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த விழா.


"பாலியல் குற்றம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உருவாக வேண்டும்" பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே நம்முடைய சென்னை காவல்துறை மிகச் சிறப்பான காவல் துறையாக இருந்து வந்தாலும், 1970-ஆம் ஆண்டு காவல்துறையை நவீனமயம் ஆக்கியவர், அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்தவர் அன்றைய முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். இதை தமிழ்நாடு காவல்துறை ஐ.ஜி.-ஆக அந்தக் காலத்தில் இருந்த மரியாதைக்குரிய எப்.வி. அருள் அவர்களே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.


அந்த அடிப்படையில்தான், இந்த ஆணையத்தை அமைத்து காவலர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்து வருகிறோம். காவல்துறையை மேலும் நவீனமயமாக்கி வருகிறோம். கடந்த மூன்றாண்டு காலத்தில் காவல் துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், காவல் துறையை நவீனமயமாக்கவும், காவலர் நலனைப் பாதுகாக்கவும் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.


மகளிர் பொன்விழா ஆண்டான இப்போது, மகளிர் காவலர்களிடையே நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கோரிக்கையை மிகுந்த மகிழ்ச்சியோடும் மனைநிறைவோடும், இந்த நிகழ்ச்சியில் அறிவிப்பாக நான் வெளியிட விரும்புகிறேன்.


பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றச்செயல் பிரச்சனைகளை தீர்ப்பதில் நம்முடைய பெண்காவலர்கள் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட குற்றங்களை கையாளுவதில் பெண் காவலர்களின் தொழில்முறைத் திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு அவர்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சி அளிக்கப்படும்.


குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்கள் நடப்பதற்கு முன்பே தடுக்கும் துறையாக செயல்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். குற்றங்கள் நடக்காத மாநிலமாக போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக பாலியல் குற்றம் இல்லாத மாநிலமாக - நம்முடைய மாநிலம் உருவாக வேண்டும்" என்றார்.