முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு இதயத் துடிப்பு சீரற்ற நிலையில் இருந்தால், ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டதாக, அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. தற்போது முதல்வர் ஸ்டாலின் நலமாக உள்ளதாகவும் ஓரிரு நாட்களில், வழக்கமான பணிகளை மேற்கொள்வார் எனவும் அப்பல்லோ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இன்று அப்பல்லோ நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், ''முதலமைச்சர்‌ ஸ்டாலினுக்கு ஏற்பட்ட தலைசுற்றல்‌ பிரச்சினை தொடர்பாக சென்னை, க்ரீம்ஸ்‌ சாலையில்‌ உள்ள அப்பல்லோ மருத்துவமனையில்‌ பல்வேறு மருத்துவப்‌ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில்‌, இதயத் துடிப்பில்‌ உள்ள சில வேறுபாடுகள்‌ காரணமாகவே இந்த தலைசுற்றல்‌ ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.

ஆஞ்சியோகிராம்‌ சோதனை

இதய சிகிச்சை மருத்துவர்‌ செங்குட்டுவேலு தலைமையிலான மருத்துவ வல்லுநர்‌ குழுவின்‌ அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சை முறை அப்போலோ மருத்துவமனையில்‌ இன்று காலை செய்யப்பட்டது.

இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம்‌ சோதனையும்‌ இயல்பாக இருந்தது. முதலமைச்சர்‌ நலமாக உள்ளார்கள்‌. தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில்‌ மேற்கொள்வார்கள்‌''.

இவ்வாறு அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ஜூலை 21ஆம் தேதி அனுமதிக்கப்பட்ட முதல்வர்

முன்னதாக, முதல்வர் ஸ்டாலின் ஜூலை 21ஆம் தேதி லேசான தலைசுற்றல் காரணமாக, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவமனையில் இருந்தே அரசு அலுவல்களை மேற்கொள்வார் எனவும் அப்பல்லோ நிர்வாகம் தெரிவித்து இருந்தது. 

இதற்கிடையே நேற்று (ஜூலை 23) உங்களுடன் ஸ்டாலின் திட்டப் பயனாளிகளுடன் முதல்வர் கலந்துரையாடினர். கையில் பாண்டேஜுடன் அவர் அரசு அலுவல்களை பார்க்கும் புகைப்படங்கள் வெளியாகி இருந்தன. 

முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை

இந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலினுக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.