நாடு முழுவதும் இன்று மருத்துவ இளநிலை படிப்பிற்கான நீட் தேர்வு நடைபெற உள்ளது. இந்த நிலையில், சேலம் மாவட்டம் கூழையூரில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் தனுஷ் என்பவர் தற்கொலை செய்து கொண்டார். ஒவ்வொரு நீட் தேர்வின்போதும் ஒரு மாணவர் தற்கொலை செய்து கொண்டு வந்த சூழலில், இந்த தேர்வின்போதும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டிருப்பது மாநிலம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது,


“ நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். அந்த மாணவருக்கு அஞ்சலி செலுத்தி அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவிற்கு கிராமப்புற- நகர்ப்புறஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார். நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப்பெரிய சிரமங்களை புரிந்து கொள்ளாத ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வர வேண்டிய மாணவ – மாணவிகள் தற்கொலைக்கு காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது.




நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள், லீக், ஆள்மாறாட்டம் உள்ளிட் பல்வேறு மோசடிகளும், மாணவ மாணவிகள் தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை என்பது கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும், மேலும் வலுவடைய வைக்கிறது.


இந்த நிலையில், ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப்போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்த விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்திய துணைக்கண்டத்தில் பிரச்சினையாக கருதி அனைத்து மாநில முதல்வர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று ஆதரவு திரட்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.




மாணவச்செல்வங்கள் மனம் தளர வேண்டாம். சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்து தரும் பெரும் பொறுப்பும், கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும்வரை நமது சட்டரீதியான போராட்டம் தொடரும். எனவே, மாணவர்கள் யாரும் விபரீத முடிவுகள் எடுக்க வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.”


இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடைபெற்று வரும் 2017ம் ஆண்டு நீட் தேர்வு தோல்வியை தாங்க முடியாமல் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டார். அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மட்டும் இதுவரை 10க்கும் மேற்பட்ட மாணவர்கள் நீட் தேர்வு அச்சத்தினாலும், தோல்வியினாலும் உயிரிழந்துள்ளனர்.