சனாதானம் குறித்து நான் பேசியதை திரும்ப பெற மாட்டேன் என்றும், சட்டப்படி வழக்கை எதிர்கொள்வேன் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தி வரும் நிலையில், இந்த முன்னோட்டமானது நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடத்தப்படுகிறது. இதன் ஒருபகுதியாக சென்னையில் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையிலான திமுகவினர் சந்தித்தனர். அப்போது நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி திமுகவினர் நடத்தும் கையெழுத்து இயக்கத்தில் தங்களது கையெழுத்துகளை பதிவிட்டு திருமாவளவன் உள்ளிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஆதரவு தெரிவித்தனர். 


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். அப்போது, ‘ நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற, நீட் விலக்கு நம் இலக்கு என  50 நாளில் 50 லட்சம் கையெழுத்து பெரும் இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. இது திமுகவின் பிரச்சனை அல்ல, அனைத்து மருத்துவ மாணவர்களின் பிரச்சனை என்பதால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற நடைபெறும் இந்த கையெழுத்து இயக்கத்திற்கு  அதிமுக உட்பட அனைத்து கட்சிகளிடமும் நேரம் கேட்கப்பட்டுள்ளது. 


இதுவரை 10 லட்சம் கையெழுத்து பெறப்பட்டுள்ளது. இந்த கையெழுத்து இயக்கத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனைவரும் பங்கேற்க வேண்டும். மேலும் இதுதொடர்பாக India கூட்டணியில் உள்ள கட்சிகளையும் சந்தித்து வலியுறுத்த உள்ளோம் எனவும் தெரிவித்தார்.


தொடர்ந்து பேசிய உதயநிதி, சனாதானம் குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அதாவது,முன்னதாக இன்று, வழக்கு ஒன்றில் கருத்து தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘சனாதன தர்மம் ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட தமிழ்நாடு அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை தனது கடமையை தவறி குற்றம் செய்துள்ளனர்’ என கருத்து தெரிவித்திருந்தது. அதிகாரத்தில் இருப்பவர்கள் பொது நிகழ்ச்சிகலில் பேசும்போது சாதி, மதம் மற்றும் கொள்கை ரீதியாக பிளவு ஏற்படாதவாறு கவனமாக பேச வேண்டும் என தெரிவித்திருந்தது. 


அதற்கு ‘சனாதானம் குறித்து நான் பேசியதை திரும்ப பெற மாட்டேன் என்றும், எத்தனை வழக்குகள் வந்தாலும் சட்டப்படி எதிர்கொள்வேன். அம்பேத்கர், பெரியார் பேசியதை விட நான் பெரிதாக பேசவில்லை.இன்று உள்ள பதவிகள் வரும் போகும். ஆனால் முதலில் மனிதனாக இருக்க வேண்டும்' என உதயநிதி ஸ்டாலின்  தெரிவித்தார்.