கள்ளக்குறிச்சி விவகாரம்: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


கள்ளச்சாராயம்: அதிகரிக்கும் உயிரிழப்பு


நேற்று முன்தினம் கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாரயத்தை அருந்திய பலருக்கு, கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலரின் நிலை மோசமடைந்ததால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.


இந்நிலையில், தற்போதுவரை கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்திற்கு உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார். 


ரூ.10 லட்சம் இழப்பீடு:



இந்த சூழ்நிலையில், கள்ளக்குறிச்சிக்கு, அமைச்சர் உதயநிதி சென்றார். அங்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை பார்த்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் 27 குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கினார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்




அரசு நடவடிக்கை:


கள்ளச்சாராய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரவண்குமார் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் அம்மாவட்ட காவல் கண்காணிப்பாள சமய்சிங் மீனாவையும் சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதோடு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டி செல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர்  ஆனந்தன், ஷிவ்சந்திரன், உதவி ஆய்வாளர், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல் நடவடிக்கைக்காகவும் உடனடியாக CBCID வசம் ஒப்படைக்கப்பட்டு, விசாரணையும் தொடங்கப்பட்டுள்ளது.


தீவிர சிகிச்சை:


விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் இருந்து 4 சிறப்பு மருத்துவர்களை கொண்ட குழு கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த குழு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறது. அதோடு, சேலம் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இருந்தும்,சிறப்பு மருத்துவர் குழு கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 18 பேர் ஆம்புலன்ஸ்கள் மூலமாக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு உயர்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 6 பேருக்கு அவசர சிகிச்சை அளிப்பதற்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளனர். 12 ஆம்புலன்ஸ்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனையில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. மேல்சிகிச்சைக்கு தேவையான அனைத்து மருந்துகளும், விழுப்புரம், சேலம், திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இப்பணிகளை மேற்பார்வையிட, தமிழ்நாடு சுகாதாரத் திட்ட இயக்குனர் கோவிந்தராவ் மற்றும் மருத்துவக் கல்வி இயக்குனர் ஆகியோர் கள்ளக்குறிச்சிக்கு விரைந்துள்ளனர்.