விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைவதால் கட்சி தலைவர்கள் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இரண்டாவது நாளாக திமுக இளைஞரணி அமைப்பாளர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்கிறார். இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளராக அபிநயா உள்பட 29 பேர் போட்டியிடுகின்றனர்.   


இந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவை ஆதரித்து தும்பூர், நேமூர் ஆகிய கிராமங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்குகள் சேகரித்தார்.



அமைச்சர் உதயநிதி தேர்தல் பிரச்சார பரப்புரை: 

 

நான் நேற்று மாலையிலிருந்து விக்கிரவாண்டி தொகுதி முழுவதும் சுற்றி சுற்றி அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்து வருகிறேன். உதயசூரியன் வாக்கு பெட்டியில் எப்படி முதல் இடத்தில் இருக்கிறதோ, அதேபோல வாக்கு எண்ணிக்கையிலும் முதலிடத்தில் இருக்க வேண்டும்.

 

நாடாளுமன்றத் தேர்தலின் போது முதல்வர் 40 நாடாளுமன்ற தொகுதிக்குச் சென்று வாக்கு கேட்டு பாசிச பாஜகவை ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும் அடிமை அதிமுகவையும் ஓட ஓட விரட்ட வேண்டும் என்றும் இந்திய கூட்டணி ஜெயிக்க வேண்டும் என பிரச்சாரம் செய்தவர்தான் முதல்வர் ஸ்டாலின்.

 

ஒன்றிய பிரதமர் மோடி, ஏழு, எட்டு முறை தமிழ்நாட்டுக்கு பிரச்சாரத்திற்கு வந்தார். பிரதமர் மோடி ஆயிரம் முறை வந்தாலும் சரி தமிழ்நாட்டில் உங்களால் காலூன்ற முடியாது. தமிழ்நாட்டு மக்கள் உங்களுக்கு அந்த இடத்தை தர மாட்டார்கள். அன்னியூர் சிவாவை குறைந்தது ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும்... 

 

திராவிட முன்னேற்றக் கழகம் எந்த தேர்தலை சந்தித்தாலும் தமிழக மக்கள் வெற்றியை கொடுத்து வருகிறீர்கள். திமுகவிற்கும் முதல்வருக்கும் தமிழக மக்கள் தொடர் வெற்றியை தருகிறீர்கள். மூன்றாண்டு முன்பு திமுக ஆட்சி அமைந்தால் பெட்ரோல் விலை குறைப்பேன் முதல்வர் தெரிவித்தார், ஆட்சி அமைந்த உடன் பெட்ரோலுக்கு ரூபாய் மூன்று ரூபாய் குறைத்தார். பால் விலை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்தார்.

 

விழுப்புரம் மாவட்டத்தில் பத்தாயிரம் மாணவிகள் புதுமைப்பெண் திட்டத்தில் மூலம் பயன் பெற்றிருக்கிறார்கள்.

விழுப்புரம் மாவட்டத்தில் கலைஞர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் 3 லட்சம் மகளிர் மாதம் ஆயிரம் ரூபாய் பெற்றவருகின்றனர்.

 

பிரதான எதிர்க்கட்சி அதிமுக தேர்தலில் போட்டியிடவில்லை எதனால் தெரியுமா ? அவர்களுக்கு பயம், தொடர் தோல்வியின் சந்தித்து வருகிறார்கள்.  அனைத்து தேர்தலிலும் திமுகவுக்கு வெற்றியையும் , அதிமுகவிற்கு தோல்வியும் கொடுத்து வருவதால் தான் பயம்.

 

திமுகவின் மீது மட்டும் பயமில்லை, அதிமுக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மக்களை பார்த்து பயம். அது மட்டுமல்ல பாஜகவை பார்த்தும் பயம், பாஜகவுக்கு வழி விட்டு தேர்தலை புறக்கணித்து இருக்கிறார்கள்.

 

இன்றைக்கு அனைத்து வட மாநிலங்களில் நீட் தேர்வுக்கு எதிர்த்து குரல் கொடுத்து வருகிறார்கள். ஏழு வருடத்திற்கு முன்பு இந்த நீட் தேர்வு ரத்து செய்யக்கோரியது திராவிட முன்னேற்ற கழகம் தான்.  இன்று வட மாநில தலைவர்கள் புரிந்து கொண்டு தற்போது நீட் தேர்வு எதிர்த்து வருகின்றனர்.  நீட் தேர்வு நடத்தும் கட்சியுடன் பாஜகவுடன் சேர்ந்து தேர்தல் கூட்டணி அமைத்திருக்கிறது பாமக எனவே அவர்களை நிராகரிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.