சென்னையில் ஜூன் 13 முதல் 17 வரை உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெற உள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இந்த உலகக்கோப்பை ஸ்குவாஷ்  தொடரானது சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடக்கிறது. ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டிக்கான டி-சர்ட் அறிமுகம் செய்து முதற்கட்டமாக ரூ.1.50 கோடியை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். 


அதன்பிறகு பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “சென்னையில் ஜூன் 13 முதல் 17 வரை உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெற உள்ளது. ஒலிம்பிக்கில் ஸ்குவாஷ் விளையாட்டை சேர்ப்பதற்கு முக்கிய பங்காக இப்போட்டி இருக்கும். இந்த போட்டியில் ஹாங்காங், சீனா, ஜப்பான், எகிப்து, தென்னாப்பிரிக்கா, மலேஷியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து பல வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். ஸ்குவாஷ் போட்டி நடத்த ரூ. 1.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது “ என்றார். 


தொடர்ந்து, ஜல்லிக்கட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து முதலமைச்சரிடம் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். 


அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, “ தமிழ்நாடு அரசின் நிதியுதவியுடன் சர்வதேச ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டிகள் நடத்தப்பட இருக்கிறது. போட்டியை நடத்தும் இந்தியாவுடன் ஹாங்காங், சீனா, ஜப்பான், எகிப்து, தென்னாப்பிரிக்கா, மலேஷியா உள்ளிட்ட 8 நாடுகளை சேர்ந்த தலைசிறந்த ஸ்குவாஷ் வீரர்கள் பங்கேற்க இருக்கின்றன. 


இந்தாண்டுக்கான (2023) சர்வதேச ஸ்குவாஷ் உலகக்கோப்பை போட்டியானது சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. திராவிட மாடல் ஆட்சியில் இளைஞர்கள் விளையாட்டு துறையில் முன்னேற்றம் பெற வேண்டும். அந்த வகையில்தான் செஸ் ஒலிம்பியாட் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச போட்டிகள் இங்கு நடத்தப்பட்டு வருகிறது.” என்று தெரிவித்தார். 


இதனை தொடர்ந்து, தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ.1.50 கோடிக்கான செக்கை தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் அசோசியேஷன் தலைவர் என். ராமச்சந்திரனிடம் வழங்கினார்.  இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு துறை செயலர் அதுல்யா மிஸ்ரா, விளையாட்டு மேம்பாட்டு அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.