ஓமந்தூரார் மருத்தவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மாற்றப்பட்டுள்ளார். காவேரி மருத்துவமனையில் அமைச்சருக்கு அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்ற வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மருத்துவமனை வெளியே காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.


செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை:


செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் முன்னதாக அனுமதி வழங்கியது. இதையடுத்து, செந்தில்பாலாஜி நேற்று இரவு தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இன்று மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.


செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி இந்த உத்தரவை பிறப்பித்தனர். செந்தில் பாலாஜியை அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் உரிய அனுமதியின்றி சந்திக்கக் கூடாது.  அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருமே உரிய அனுமதி பெற்று செந்தில் பாலாஜியை சந்திக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல, காவேரி மருத்துவமனைக்கு சென்று அமலாக்கத்துறை குழுவும் ஆராயலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 


மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர்.


அதேபோல் அவரின் தலைமைச்செயலகத்தில் உள்ள அறையில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையானது சுமார் 17 மணி நேரம் நீடித்த நிலையில் கடந்த புதன்கிழமை நள்ளிரவு 2 மணியளவில் செந்தில் பாலாஜியை கைது செய்து அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர். 


நடந்தது என்ன?


அப்போது அவர் அதிகாரிகளிடம் நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவரும் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். 


அதேசமயம் செந்தில் பாலாஜிக்கு 3 இடங்களில் அடைப்புகள் இருப்பதால் உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனிடையே மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்டு விட்டு, ஜூன் 28 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 


இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் இலாகா வேறு அமைச்சர்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. அவர் வகித்து வந்த மின்சாரத்துறையானது, அமைச்சர் தங்கம் தென்னரசுவுக்கு கூடுதலாக ஒதுக்கப்படுகிறது. மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை, அமைச்சர் முத்துசாமிக்கு கூடுதலாக ஒதுக்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். ஆனால், ஸ்டாலினின் பரிந்துரையை ஆளுநர் மறுத்தவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.