தமிழகத்தை சேர்ந்த முதுமலை காப்பகம் மற்றும் ஆனைமலை புலிகள் காப்பகம் ஆகியவற்றில் பணிபுரியும் யானை பாகன்கள், மருத்துவர்கள் உட்பட 18 பேர் தாய்லாந்தில் யானைகள் முகாமில் பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்ற வனத்துறையினர் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தங்களுடைய பயிற்சி அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

"மனிதர்களை யானைகள் தாக்குவது வழக்கம்தான்"

இதில் தமிழக வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ மற்றும் வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். பயிற்சி பெற்ற வனத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ராஜ கண்ணப்பன் சான்றிதழ்களை வழங்கினார்.

மேலும், முதல் முறையாக வெளிநாட்டிற்கு சென்று பயிற்சி எடுத்துக் கொண்ட வனத்துறையினர் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ராஜகண்ணப்பன், "வனத்துறை சார்பாக இரண்டாவது முறையாக வெளிநாடுகளுக்கு சென்று பயிற்சி எடுத்துள்ளனர்" என்றார்.

என்ன சொன்னார் ராஜகண்ணப்பன்?

வண்டலூர் உயிரியல் பூங்காவில் தற்காலிக பணியாளர்களை நிரந்தர பணியாளர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது குறித்து கேட்டபோது, "நிதி நிலையை பொறுத்து அனைவரையும் நிரந்தர பணியாளர்களாக மாற்ற வேண்டியதுதான். மருத்துவர்கள், செவிலியர்கள் நியாயமாக பணி நியமனம் செய்யப்பட்டது போன்று.

பத்து மாதத்தில் தேர்தல் வர உள்ளது. அதற்குள் எல்லாம் முடிவு செய்து விடுவார்கள். மக்கள் நலன் மற்றும் நிதிநிலை குறித்து முதல்வர் தெளிவாக கையாளுகிறார். முக்கியமான கோரிக்கைகள் நிறைவேற்றி தரப்படும் போராட வேண்டிய அவசியம் இல்லை 

வரிக்குதிரை வண்டலூர் உயிரியல் பூங்காவில் இல்லை. அது கொண்டு வருவதற்கான முயற்சிகள் மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் விரைவில் வர வாய்ப்புள்ளது. யானைகள், புலிகள், சிறுத்தைகள், பொதுமக்களை தாக்குவது சாதாரணமாக நடப்பது தான்.

அதற்கு போதுமான நிவாரணங்கள் வழங்கப்படுகிறது. வனத்துறை நடவடிக்கை நிச்சயமாக எடுக்கிறது. பூச்சி கடித்தாலும் நாய் கடித்தாலும் இங்குதான் வருகிறார்கள். அனைத்தையும் வனத்துறை தான் பார்க்கிறது. அன்றாடும் நடக்கும் நிகழ்வுகளில் முதலமைச்சர் தெளிவான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்" என்றார்.

குழந்தை சிறுத்தை தாக்கி உயிரிழந்தது அன்றாடம் நடவடிக்கையா என கேட்ட பொழுது அதற்கான நிதி வழங்கி விடுகிறோம் அதற்கான நடவடிக்கையும் எடுத்து விடுகிறோம் என அமைச்சர் தெரிவித்தார். எட்டு கோடி பேர் இருக்கும் இடத்தில் எதோ ஒரு நிகழ்வு நடக்கத்தான் செய்யும் என தெரிவித்தார்.