விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். இதன் வழக்கு விசாரணை 5-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.


அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு


விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தின்போது அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி மற்றும் ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 44 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 28 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.


முன்னாள் மாவட்ட ஆட்சியர் சாட்சியம்


இந்நிலையில் மற்ற சாட்சிகளின் விசாரணைக்காக இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கோபிநாதன், சதானந்தம், ஜெயச்சந்திரன், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, பொன்.கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும் நேற்று அரசு தரப்பு சாட்சியாக விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியரும் தற்போது வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை முதன்மை செயலாளராக பணியாற்றி வருபவருமான பிரஜேந்திர நவ்நீத், மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா முன்னிலையில் நேரில் ஆஜரானார்.



அப்போது அவர், நேற்று காலை 11.45 மணிக்கு இவ்வழக்கு தொடர்பாக சாட்சியம் அளிக்க ஆரம்பித்தார். வானூர் தாசில்தார், விழுப்புரம் கோட்டாட்சியர், கனிமவளத்துறை உதவி இயக்குனர் ஆகியோர் கொடுத்த அறிக்கையின் அடிப்படையிலும், அவர்கள் சமர்பித்த ஆவணங்களை பரிசீலனை செய்தும் கடந்த 21.3.2007 அன்று ஜெயச்சந்திரன் பெயரிலும், 4.10.2007 அன்று பொன்.கவுதமசிகாமணி பெயரிலும் செம்மண் குவாரி உரிமத்துக்கான அனுமதி வழங்கப்பட்டது என்றுகூறி சாட்சியம் அளித்தார். அப்போது செம்மண் குவாரிக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக நீதிபதி கேட்ட சில கேள்விகளுக்கும் பிரஜேந்திர நவ்நீத் உரிய பதில்களை அளித்தார். சுமார் 1½ மணி நேரமாக சாட்சியம் அளித்த ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரஜேந்திர நவ்நீத், தனது சாட்சியத்தை மதியம் 1.15 மணிக்கு நிறைவு செய்தார். அதன் பிறகு மதிய உணவு இடைவேளை முடிந்து 2.30 மணிக்கு மீண்டும் ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரஜேந்திர நவ்நீத், ஆஜரானார். அவரிடம் பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன் தரப்பு வக்கீல்கள் குறுக்கு விசாரணை செய்தனர். இந்த விசாரணை மாலை 3.15 மணிக்கு முடிவடைந்தது.


விசாரணை ஒத்திவைப்பு


ஐ.ஏ.எஸ். அதிகாரி பிரஜேந்திர நவ்நீத் அளித்த சாட்சியம் மற்றும் அவரிடம் நடத்தப்பட்ட குறுக்கு விசாரணை முழுவதையும் பதிவு செய்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இதன் வழக்கு விசாரணையை வருகிற 5-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார். ஏற்கனவே உயர்நீதிமன்ற தீர்ப்பால் பதவி இழந்த பொன்முடி உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி வழக்கில் இருந்து தற்காலிக விடுதலை வாங்கியதன் விளைவாக மீண்டும் அவருக்கு அமைச்சர் பதவி கிடைத்தது.


இந்நிலையில், இந்த செம்மண் குவாரி வழக்கும் நாளுக்கு நாள் வேகமெடுத்து வருவது அவருக்கு புதிய தலைவலியை உருவாக்கியுள்ளதாக கூறப்படுகிறது