சேலம் மாநகரில் காவல்துறை ஆணையாளராக இருந்த விஜயகுமாரி சென்னை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதனால் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளராக இருந்த பிரவீன் குமார் அபினபு சேலம் மாநகர காவல் ஆணையாளராக மாற்றப்பட்டார்.


சேலம் மாநகரின் 23 ஆவது காவல் ஆணையாளராக பிரவீன் குமார் அபினபு  இன்று பொறுப்பேற்று கொண்டார். அவருக்கு காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு, "மாநகரில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க சீரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும்.


பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உண்டான குற்றச்சம்பவங்களை தடுக்கவும், கஞ்சா குட்கா மற்றும் போதை பொருட்கள் முற்றிலும் ஒழிக்கவும், சாலை விபத்துகளில் உயிரிழப்பு தடுக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



மேலும், பொதுமக்கள் காவல் நிலையத்தில் குறைகளை தெரிவித்தால் காவல் நிலைய அதிகாரிகள் பிரச்சினைகளை ஆராய்ந்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும். சேலம் மாநகரில் ரவுடி பட்டியல் எடுக்கப்பட்டு குற்ற சம்பவங்கள் முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ளதாக அறியப்பட்டுள்ளது. 


காவல்துறையின் முக்கிய அங்கமாக உள்ள சிசிடிவி கேமராக்களின் பழுதுகளை நீக்கி மாநகர் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் சரி செய்யப்படும். மேலும் கேமராக்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றார். பொதுமக்கள் நேசிக்கும் காவல்துறையாக சேலம் மாநகரம் செயல்படும்” என புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட சேலம் மாநகர காவல் ஆணையாளர் பிரவீன் குமார் அபினபு தெரிவித்தார்.