மயிலாடுதுறையில் முழு ஊரடங்கை   கடைபிடிக்காத பொதுமக்கள் மீது அபராதம் விதித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துவருகின்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து பொதுமக்கள் அரசின் முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா வைரஸ் இரண்டாவது அலை பரவலைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒன்றாக ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கான இன்று மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறையினர் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 



இந்நிலையில் மயிலாடுதுறையில் ஊரடங்கு உத்தரவை மீறி ஏராளமானோர் இருசக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தனர். இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா உத்தரவின் பேரில் முக்கிய சாலைகள் பேரிகார்டு மூலம் அடைக்கப்பட்டு  தேவையில்லாமல் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது  இ- சலான் முறையில் அபராதம் விதித்து நடவடிக்கை மேற்கொண்டனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 



அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மயிலாடுதுறை மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீ நாதா காவல் நிலைய எல்லைப்பகுதிகளில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருவதாகவும், 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் எனவும், இதுவரை ஊரடங்கு உத்தரவு விதி மீறலில் ஈடுபட்ட 44 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 24 இருசக்கர வாகனங்கள்  பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாமல் வந்த 250 நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைப்பிடிக்காத 15 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.



ஹெல்மெட் அணியாமல் வந்தவர்கள் மீது 350 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபராதம் விதிப்பது நடவடிக்கை எடுப்பது காவல்துறையின் நோக்கமல்ல என்றும், பொதுமக்கள் ஊரடங்கு உத்தரவை கடைபிடித்து, கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு அளித்து  பாதுகாப்பாக இருக்கும்படி வேண்டுகோள் விடுத்தார்.