மயிலாடுதுறை: அரசுப் பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார்பாக இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இந்தப் பயிற்சி வகுப்புகளைச் சிறப்பாக நடத்துவதற்கு, திறமையான மற்றும் முன் அனுபவமிக்க பயிற்றுநர்கள் (Trainers) தேர்வு செய்யப்பட உள்ளதாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய தகவல்கள் பின்வருமாறு;
இலவச போட்டித்தேர்வு பயிற்சி வகுப்புகள்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC), மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மற்றும் ரயில்வே தேர்வு வாரியம் (RRB) ஆகியவை தொடர்ந்து பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவர்கள், அதிக கட்டணம் செலுத்தி தனியார் பயிற்சி மையங்களில் படிக்க முடியாத நிலை உள்ளது.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு, மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உள்ள தன்னார்வப் பயிலும் வட்டம் (Study Circle) மூலமாக கீழ்க்கண்ட முக்கிய தேர்வுகளுக்கு முற்றிலும் இலவசமாகப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
TNPSC Group 1: (தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 தேர்வுகள்)
SSC CGL: (மத்திய பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வுகள்)
RRB ALP: (ரயில்வே தேர்வு வாரியத்தின் உதவி லோகோ பைலட் தேர்வுகள்)
இந்த இலவசப் பயிற்சி வகுப்புகளில் நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்துகொள்ள உள்ள மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்குவதற்காகப் புதிய பயிற்றுநர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
பயிற்றுநர்களுக்கான தகுதிகள் மற்றும் நிபந்தனைகள்
போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்குச் சரியான வழிகாட்டுதல் மிகவும் அவசியமாகும். எனவே, இந்தப் பயிற்சி வகுப்புகளுக்குப் பாடம் நடத்த வரும் பயிற்றுநர்கள் குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன் அனுபவம்: போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வருபவர்களாகவும், குறிப்பாக மேற்கண்ட தேர்வுகளில் முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுகளில் (Main Exams) கலந்துகொண்ட அனுபவமிக்க இளைஞர்கள் மற்றும் இளைஞகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
கற்பிக்கும் திறன்: மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில் பாடங்களை நடத்தும் திறனும், தேர்வுகளை எதிர்கொள்ளும் நுணுக்கங்களைக் கற்றுத்தரும் ஆர்வமும் கொண்டிருக்க வேண்டும்.
ஊதிய விவரம்: தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான பயிற்றுநர்களுக்கு, அவர்கள் நடத்தும் வகுப்புகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு கௌரவ மதிப்பூதியம் (Honorarium) வழங்கப்படும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்
தகுதியும் ஆர்வமும் உள்ள நபர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நேர்முகத் தேர்வு (Interview) மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரடியாக நடைபெற உள்ளது.
தேதி: 01.07.2026 (புதன்கிழமை)
நேரம்: காலை 10.30 மணி
இடம்: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மயிலாடுதுறை.
நேர்முகத் தேர்விற்கு வரும்போது கொண்டு வர வேண்டியவை; நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வரும் விண்ணப்பதாரர்கள், தங்களின் கற்பித்தல் திறனை நிரூபிக்கும் வகையில் கீழ்க்கண்டவற்றைத் தயார் நிலையில் எடுத்து வர வேண்டும்.
1. பாடக்குறிப்புகள் (Lesson Notes): தாங்கள் பாடம் நடத்தத் தேர்ந்தெடுத்துள்ள தலைப்பிற்கான தெளிவான குறிப்புகள்.
2. பவர்பாயிண்ட் விளக்கக்காட்சி (PPT): பாடத்தை டிஜிட்டல் முறையில் விளக்குவதற்கான கணினி வழி விளக்கக்காட்சி.
3.முந்தைய ஆண்டு கேள்வித்தாள்கள் (Previous Year Question Papers): சம்பந்தப்பட்ட தேர்விற்கான கடந்த கால கேள்வித்தாள்களின் தொகுப்பு.
4.மாதிரித் தேர்வு (Mock Test): மாணவர்களுக்கு மாதிரித் தேர்வு நடத்துவதற்கான புதிய கேள்விகள் மற்றும் அதற்கான சரியான பதில்கள்.
விண்ணப்பிக்கும் முறை மற்றும் முன்பதிவு
மேற்கண்ட தகுதிகள் இருந்து, அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு ஏழை மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பு நடத்த விருப்பம் உள்ள இளைஞர்கள் மற்றும் இளைஞகள், நேர்முகத் தேர்வுக்கு முன்னதாகவே தங்களது விவரங்களை மின்னஞ்சல் மூலம் அனுப்பி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும்.
மின்னஞ்சலில் அனுப்ப வேண்டியவை:
போட்டித் தேர்வுகளில் (முதல்நிலை / முதன்மைத் தேர்வுகள்) தங்களுக்கு உள்ள அனுபவம் மற்றும் கல்வித் தகுதி குறித்த முழுமையான சுயவிவரப் படிவம் (Resume/CV)
தாங்கள் ஏதேனும் ஒரு பாடத்தை மாணவர்களுக்குப் பயிற்சி வகுப்பில் நடத்துவது போன்று பதிவு செய்யப்பட்ட 5 நிமிட காணொளி காட்சி (5-Minute Demo Video)
இவற்றை studycircledeomayil@gmail.com என்ற அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி முன்பதிவு செய்துகொள்ள வேண்டும். மின்னஞ்சல் அனுப்பிய பிறகே, குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் நேரடி நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.
தொடர்புக்கு: இந்த வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் மற்றும் பயிற்றுநர் தேர்வு தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய விரும்புவோர், 9499055904 என்ற WhatsApp எண்ணைத் தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.
மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த, போட்டித் தேர்வுகளில் அனுபவமிக்க இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, அரசுப் பணிக்குத் தயாராகும் மாணவர்களின் வெற்றிக்கு வழிகாட்ட முன்வர வேண்டும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
