விழுப்புரம் வட்டம் மரக்காணம் ஒன்றியக் குழு தலைவர் தேர்தலில் திமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தயாளன் வெற்றி பெற்றார். மறுவாக்கு எண்ணிக்கை கேட்டும் வழங்காமல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தோல்வியடைந்த திமுக வை சேர்ந்த அர்ஜூனன் பேட்டி. தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடந்த ஊரக ஊராட்சித் தேர்தலில் கடந்த அக்டோபார் 22ந் தேதி விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் ஒன்றியக் குழு தலைவருக்கான தேர்தல் நடந்தது. மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள 26 கவுன்சிலர்களில் திமுக 17, வி.சி.கே - 1, அதிமுக 3, பாமக 2, சுயேட்சை 3 என தேர்வானார்கள்.



திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்றதால் அக்கட்சி சார்பில் மரக்காணம் திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளனை ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிட அக்கட்சி மேலிடம் அனுமதித்திருந்தது. அதே வேலையில் மரக்காணம் மத்திய ஒன்றிய செயலாளர் நல்லூர் கண்ணனும் ஒன்றிய குழு தலைவர் பதவிக்கு போட்டியிடப் போவதாக அறிவித்தார். இரு தரப்புக்கும் இடையே பிரச்சினை நடைபெற்றதால் தேர்தல் நடத்த போதிய கோரம் இல்லாததாலும், வேட்பு மனுதாக்கல் செய்யும் காலம் முடிந்ததாலும் தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.


இதனிடையே கட்சி கட்டுப்பாட்டை மீறி தேர்தலில் போட்டியிட முயற்சித்த நல்லூர் கண்ணனை திமுக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். இந்த தேர்தலை மீண்டும் போலீஸ் பாதுகாப்புடன் நடத்த வேண்டும் என  நல்லூர் கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவுப்படி ஒத்தி வைக்கப்பட்ட தேர்தல் இன்று காலை 10 மணி மரக்காணம் ஊராட்சி ஒன்றிய கவுன்சில் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த தேர்தலில் திமுக கட்சி சார்பில் அதிகாரப்பூர்வ வேட்பாளராக நிறுத்தப்பட்ட தயாளன் மற்றும் அக்கட்சியில் இருந்து தற்காலிக இடை நீக்கம் செய்யப்பட்ட நல்லூர் கண்ணனின் ஆதரவாளரும் திமுக கவுன்சிலருமான அர்ஜூன் இருவரும் வேட்பு மனுதாக்கல் செய்தார்கள். 26 கவுன்சிலர்கள் வாக்களித்ததை தொடர்ந்து திமுக வின் அதிகாரப்பூர்வ பேட்பாளர் தயாளன் 14 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக தேர்தல் நடத்தும் அதிகாரி சரவணன் அறிவித்தார்.



இதனைத் தொடர்ந்து இத்தேர்தலில் தோல்வியடைந்த திமுக வை சேர்ந்த அர்ஜூனன் செய்தியாளர்களிடம் ஒன்றியக்குழு தலைவர் தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாகவும், மறு வாக்கு எண்ணிக்கை கேட்டதற்கும் மறுத்ததால் நீதிமன்றத்தை நாடவுள்ளதாக அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.  இதில் அர்ஜுனனுக்கு 14 வாக்குகள் வந்ததாகவும் தயாரித்து 12 வாக்குகள் வந்ததாகவும் தேர்தல் நடத்தும் அலுவலர் அதனை மாற்றி தயாளன் வெற்றி பெற்றதாக அறிவித்து உள்ளார் என இதனை கண்டித்து அர்ஜுனன் ஆதரவாளர்கள் மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.



இந்த தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவம் எதுவும் நடக்காமல் இருக்க 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். ஊராட்சி ஒன்றியக்குழு அலுவலகத்தை சுற்றி 300 மீட்டருக்குள் கவுன்சிலர்கள் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.