பாலின சமத்துவத்தை பாதுகாப்பதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருவதாகவும், மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுப் பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாக திகழ்கிறார்கள் என்றும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.


சுயசக்தி விருதுகள்:


சென்னை டி.டி.கே சாலையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சக்தி மசாலாவின் 6 ஆம் ஆண்டு "சுயசக்தி விருதுகள் 2023-யின்" தொடக்க விழா  நிகழ்ச்சி நடைபெற்றது, நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மற்றும் நடிகைகள் சுஹாசினி மணிரத்னம், வரலக்ஷ்மி சரத்குமார் கலந்துகொண்டனர். அவர்கள் இந்த ஆண்டிற்கான சுயசக்தி 2023 விருதினை அறிமுகம் செய்து வைத்தனர். 


சக்தி மசாலாவின் சுயசக்தி விருதுகள் 2023- யில் மாணவர்கள் மற்றும் வீட்டில் இருந்தபடி தொழில் முனையும் பெண்களை ( http://homepreneurawards.com ) என்கிற லிங் கை பயன்படுத்தி   விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும்  மேலும் விண்ணப்பிக்கும் கடைசி நாள் ஜூன் 16ஆம் தேதி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறை:


நிகழ்ச்சியில் மேடையில்  அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது, "இது போன்ற நிகழ்ச்சிகள் மனதிற்கு மகிழ்ச்சி தருகிறது, ஒருவரை வாழ்த்துவது அவர்களை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல வழிவகை செய்யும் எனவும் நாகரிகங்கள் தோன்றிய காலத்தில் பெண்களே குடும்பத்தின் தலைவர்களாக இருந்துள்ளனர். காலப்போக்கில் பெண்கள் பல்வேறு சமூக ஒடுக்குமுறைகளுக்கு உள்ளானார்கள்.


குழந்தை திருமணம், உடன்கட்டை ஏறுதல் உள்ளிட்ட பல்வேறு ஒடுக்குமுறைகளுக்கு பெண்கள் உள்ளாக்கப்பட்டார்கள், சமீபத்தில் ஆப்கானிஸ்தான் நாட்டில் தாலிபான்கள் பொறுப்பேற்று பிறகு பெண்கள் பல்வேறு சமூக அடக்குமுறைக்கு உள்ளாகினர் .மூன்றாம் பாலினத்தவர்களை சமுதாயம் நடத்தும் விதம் மிகவும் சங்கடமாக இருக்கிறது.இது வளர்ந்து வரும் சமுதாயத்திற்கு அழகல்ல. 


தமிழ்நாட்டு பெண்கள் துணிச்சல்காரர்கள்:


இன்றளவும் ஆசிரியர்கள் பாலினம் இரண்டு என்று தான் கற்பித்து கொண்டு இருக்கின்றனர். பெண்களை வருமானம் ஈட்டும் நபராக மாற்ற வேண்டும் அதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொழில் செய்யும் வகையில் கிராமப்புறத்தில் தொழில் செய்யும் பெண்களை அங்கீகரிக்க வேண்டும்.


இந்தியாவில் அதிக அளவிலான மக்கள் தொகை உள்ளது. அதில் ஒன்றும் பெருமை இல்லை. ஆனால் அதை நாம் பெருமையாக சொல்லி கொண்டு இருக்கிறோம். பாலின சமத்துவத்தை பாதுகாப்பதில் இந்த அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டுப் பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாக திகழ்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.


குறைவு:


இந்த நிகழ்ச்சியில் நடிகை சுகாசினி மணிரத்னம் பேசியதாவது, "சின்ன குழந்தைகளின் சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகளை பார்க்கும்போது உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்குவேன். அதேபோல பெண்களை கல்யாணம் செய்து புகுந்த வீட்டிற்கு அனுப்பும் பெற்றோர்களை பார்க்கும்போது கண்ணீர் வரும் அதேபோல சுய சக்தி விருதுகளை பற்றி கேள்விப்பட்டாலும் கண்ணீர் வருகிறது.


பெண்களுக்காக பெண்களைப் பற்றி யோசிப்பவர்கள் குறைந்துவிட்டார்கள். கடந்த காலத்தில் பெரியார்,பாரதியார், பாலச்சந்தர் போன்றோர் பெண்களைப் பற்றி சிந்தித்தனர். இப்பொழுது இது போன்ற விருதுகள் வழங்குவதின் மூலம் பெண்களுக்காக இன்னும் சிந்திப்பவர்கள் இருக்கிறார்கள் என்று என்ன தோன்றுகிறது. பெண்களுக்கான உரிமைகளை வழங்குவதில் தமிழ்நாடு அனைவருக்கும் எடுத்துக்காட்டாக திகழ்ந்து வருகிறது. பல ஆண்டுகளாக பல்வேறு அரசாங்கங்களும் பெண்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள். இந்த ஆண்டு நடைபெறும் விருதுகள் வழங்கும் விழா சிறப்பாக நடைபெற எனது வாழ்த்துக்கள்" என்று கூறினார்.