நிரம்பிய பாசனக் குளங்கள்


தமிழகத்தில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருவதால்  பல்வேறு அணைகள், பாசன குளங்களில் நீர் நிரம்பி வழிகின்றன. அதன்படி, தமிழகத்தில் நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ள 3,998 பாசனக் குளங்கள் முழு கொள்ளளவை எட்டி 100 சதவீதம் நிரம்பி உள்ளன.


அவையானது, அதிகபட்சமாக மதுரை மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,340 பாசனக் குளங்களில் 820 குளங்கள் நிரம்பியுள்ளன.  தஞ்சை மாவட்டத்தில் உள்ள 641 பாசனக் குளங்களில் 399 குளங்கள் முழுமையாக நிரம்பியுள்ளன. செங்கல்பட்டு மாவட்டத்தில் மொத்தமுள்ள 564 பாசனக் குளங்களில் 231 குளங்கள் நிரம்பியுள்ளதாக பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மாவட்ட நிலவரம்:


மேலும், சிவகங்கை 206, திருவண்ணாமலை 330, புதுக்கோட்டை 174, ராணிப்பேட்டை தலா 194, திருவள்ளூர் 220 குளங்கள் நிரம்பி உள்ளன. காஞ்சிபுரம் 146, கள்ளக்குறிச்சி 93, விழுப்புரம் 89, கிருஷ்ணகிரி 78, தென்காசி 221, ஈரோடு 14, கன்னியாகுமரி 25 குளங்கள் நிரம்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மழை பொழிவு நிலவரம்


தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 10 செ.மீ மழை பதிவாகி உள்ளது. அந்த வகையில், வடபுதுப்பட்டு 9 செ.மீ, ஆம்பூர் 8 செ.மீ, வாலாஜா, ஆற்காடு, ஆம்முரில் தலா 7 செ.மீ, ஆலங்காயம், சின்னக்கல்லாறில் தலா 6 செ.மீ மழை பெய்துள்ளதாக பதிவாகி உள்ளது.


மாண்டஸ் புயல்


மாமல்லபுரம் அருகில் உள்ள கடற்கரைகளில் நேற்று முன்தினம் இரவு 9.30 மற்றும் இன்று நள்ளிரவு 2.30 மணி அளவில் புயலாக அதிகபட்சமாக 65-75 கிமீ வேகத்தில் காற்று வீசி புயல் கரையைக் கடந்தது. இதன் எதிரொலியாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.  தெற்கு அந்தமான் பகுதியில் நாளை மறுநாள் (வரும் 13ஆம் தேதி) வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின்  காரணமாக மழைப்பொழிவு இருக்கும் எனவும், இது புயலாக மாறுமா? இல்லையா? என்பது வரும் காலங்களில் தான் தெரியும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மாண்டஸ் புயல் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்துள்ளதால், தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


அடுத்து வரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..? 


இதன் காரணமாக, இன் று 11.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


மேலும் 12.12.2022 மற்றும் 13.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.


14.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில  இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரில் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.