மதுரை மருத்துவக் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர்கள் வரவேற்பு விழாவில் தேசிய மருத்துவ கமிஷன் பரிந்துரைத்த, ‘மகரிஷி சரக் சபத்’ என்ற சமஸ்கிருத வாக்கிய உறுதிமொழியை மாணவர்கள் எடுத்ததால், மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் ரத்தினவேல் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில்   சமூக  வலைத்தளங்களில் தொடர்ந்து இந்த  சம்பவம் விவாதப்பொருளாக இருந்து வருகிறது. சிலர் உறுதிமொழி சரியானது என சில மொழிப்பெயர்ப்புகளை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில்  நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பி. தியாகராஜன் ஏற்க்கப்பட்ட உறுதிமொழியில் சிலவற்றை மேற்கோள் காட்டி காட்டமாக ட்வீட் செய்துள்ளார். அதில்”உண்மைகளைச் சரிபார்த்து, முழு வெட்கமற்ற நிலைக்கு இறங்குவதற்குப் பதிலாக, கண்ணியம்/ஒருமைப்பாட்டின் சில துண்டுகளைத் தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்கவும்!” என குறிப்பிட்டுள்ளார்.






பி.  தியாகராஜன் உறுதிமொழியில் மேற்கோள் காட்டியவை “ படிக்கும் காலங்களில் சுயக்கட்டுப்பாடு , பக்தியுடன் இருப்பேன்” . “ முழு விருப்பத்துடன் என்னை என் குருவிடம் சமர்ப்பிக்கிறேன்" , " என் குரு விரும்பிய இலக்கை நோக்கி முழு முயற்சி செய்வேன் “, " பெண்கள்/ ஆண்கள் , செல்வம் என எதற்கும் என்னை ஊக்கப்படுத்தமாட்டேன்”,”நான் (முக்கியமாக ஆண் மருத்துவர்) பெண்களை அவரது கணவர் அல்லது உறவினர்கள் முன்னிலையில்தான் பரிசோதிப்பேன் “.முன்னதாக அவர் ஏற்கப்பட்ட உறுதிமொழியின் முழு ஆங்கில மொழி மாற்றத்தை பகிர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 







மதுரை மருத்துவக் கல்லூரியில் புதிதாக இணைந்த  250 முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் வரவேற்பு நிகழ்ச்சி மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.  இதில் தமிழக நிதி அமைச்சர் பி. தியாகராஜன் , அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மதுரை மருத்துவக் கல்லூரி நிர்வாகம் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.  முதன் முதலாக  மாணவர்கள் தங்களது சீருடையை அணிந்த பின்பு  ஹிப்போகிரட்டிக் என்னும்  உறுதிமொழியை ஏற்றுக்கொள்வார்கள். ஆனால் அதற்கு பதிலாக  மதுரை மருத்துவக்கல்லூரியில் மாணவா் தலைவர் ஆங்கிலத்தில் மொழிபெயா்க்கப்பட்ட சமஸ்கிருத மகரிஷி சரக் சப்த் உறுதிமொழியை வாசிக்க, இதர மாணவா்கள் தொடா்ந்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனா். இந்த விவகாரம் பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது.வழக்கமாக பின்பற்றும் நடைமுறையை மாற்றி சமஸ்கிருதத்தில் உறுதிமொழியை எப்படி ஏற்கலாம் என சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் வலுத்த நிலையில் மருத்துவ கல்வி இயக்ககம் டீன் ரத்தினவேலுவை காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. 


இந்நிலையில் இது தொடர்பாக  மருத்துவகல்லூரி மாணவர் பேரவை தலைவர் ஜோதிஸ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,” நாங்கள் சமஸ்கிருதத்தில் உறுதிமொழி ஏற்கவில்லை, ஆங்கிலத்திலயே உறுதிமொழி ஏற்றோம்.கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்து தேசிய மருத்துவகல்லூரி இயக்குனரக அறிவிப்பில் ஹிப்போகிரடிக், மகரிஷி சரக் ஷபத் ஆகிய இரண்டில் ஏதாவது ஒரு உறுதிமொழி எடுக்கலாம் என்ற அறிவிப்பின்படி மாணவர் பேரவையினராகவே இணையதளத்தில் எடுத்து உறுதிமொழி எடுத்தோம்,நேற்றுதான் மாநில அரசு மருத்துவகல்லூரி இயக்குனரகம் சார்பில் சரக் ஷபத் உறுதிமொழி எடுக்ககூடாது என சுற்றறிக்கை வந்துள்ளது, அவசரகோலத்தில் நிகழ்ச்சி நடத்தப்பட்டதால் மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி எடுத்துவிட்டோம், தேசிய மருத்துவகல்லூரி இயக்குனரகம் 2021 கல்வியாண்டு மாணவர்களுக்கான அறிவிப்பில் இருந்ததன் அடிப்படையில் நாங்களே மகரிஷி சரக் ஷபத் உறுதிமொழி எடுத்தோம் சரக் ஷபத் உறுதிமொழி ஏற்பில் எந்த அரசியலும் இல்லை, உறுதிமொழி ஏற்பு தொடர்பாக நாங்கள் கல்லூரி நிர்வாகம் யாரிடமும் இது குறித்து கேட்காமலயே நாங்களாகவே உறுதிமொழியை இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து உறுதிமொழி ஏற்றோம்” என  தெரிவித்துள்ளனர்.