"மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஸ்ரீ ஞானசம்பந்த தேசிகசம்பந்த தேசிக பராமாசாரிய சாமிகள்" என்று போற்றப்படுவர் தான் மதுரை 292- வது ஆதீனம் அருணகிரிநாதர். எம்.ஜி.ஆர், கருணாநிதி, பழ.நெடுமாறன், ஜெயலலிதா உட்பட பல்வேறு அரசியல், திரை பிரபலங்களுடன் தொடர்பில் இருந்தவர் என்பது குறிப்பிடதக்கது. ஆதீனம் அருணகிரிநாதர் தமிழையும், சைவத்தையும் இரு கண்களாக நினைத்து செயல்பட்டவர் என போற்றப்படுகிறார். உலக முன்னணி நாடுகளுக்கு சென்று ஆங்கில சொற்பொழிவும் ஆற்றியுள்ளார். தமிழ்நாட்டில் முக்கிய நபர்களில் வரிசைப்பட்டியலில் இருக்கும் மதுரை ஆதீனம் அருணகிரிநாதருக்கு கடந்த சில வருடங்களாக உடல் நலம்குறைவாக இருந்தது.


77 வயதுடைய அருணகிரிநாதர் கடந்த 8-ம் தேதி சுவாசக்கோளாறு ஏற்பட்டு மதுரை அப்பல்லோ மருத்துவ மனையில் இரவு  9:33 அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவரின் நிலை சவாலாக இருந்ததால் 12-ம் தேதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். இந்நிலையில் நேற்று 13-ம் தேதி இரவு சுமார் 9:15 மணிக்கு காலமானார் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டது. இதனால் பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் முக ஸ்டாலின் , 'ஆன்மீகப் பணியிலும் மக்கள் பணியிலும் அருந்தொண்டாற்றி அனைவரின் அன்பிற்கும் உரியவராகத் திகழ்ந்த மதுரை ஆதீனம் திரு. அருணகிரிநாதர் அவர்களின் மறைவுச்செய்தி அறிந்து துயருற்றேன். அன்னாரது மறைவால் வாடும் ஆன்மீகப் பெருமக்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்’  எனக் குறிப்பிட்டுள்ளார். 






எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் ட்வீட்டில், ‘ஆன்மீக பெரியவர், பக்திமான்,
சமூக சிந்தனையாளர், அனைத்து மதத்தவரோடும் அன்பு பாராட்டுபவர், மிகத் தொன்மையான சைவ சமய திருமடங்களில் ஒன்றான மதுரை ஆதீனத்தின் 292 ஆவது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதர் காலமானார் என்ற செய்தியறிந்து மனவேதனை அடைந்தேன், அவரின் இழப்பு தமிழுலகின் பேரிழப்பாகும்’ எனப் பதிவிட்டுள்ளார்.





 






விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தனது ட்வீட்டில், ‘மதுரை ஆதீனம் அவர்கள் திடுமென இயற்கை எய்தியது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. 
ஆன்மீக வளையத்துக்குள் மட்டுமே முடங்கிப் போகாமல் அவ்வப்போது அரசியல் களத்திலும் ஆர்ப்பரித்தவர். அன்னைத் தமிழ்காக்கும் அறப்போரில் ஆவேசம் பொங்க ஆர்த்தெழுந்தவர். சிறுத்தைகளை அணைத்துச் சிலாகித்தவர்.வீரவணக்கம்’ எனப் பதிவிட்டுள்ளார். 


’தமிழகத்தில் உள்ள தொன்மையான சைவ மடங்களிலே ஒன்று மதுரை ஆதினம். 


மதுரை ஆதினத்தின் 292-வது குருமகா சந்திதானமாக இருந்த அருணகிரிநாதர் அவர்கள் உடல்நலக் குறைவால் இயற்கை எய்தினார். 


அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார். 






நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள இரங்கல் அறிக்கையில், தனிப்பெரும் தமிழ்ச் சமயமாம் வீரசைவ சமயத்தைப் போற்றி வளர்த்திடும் பழம்பெருமைமிக்க மதுரை ஆதினத்தின் 292வது மடாதிபதியாகத் திகழ்ந்த வணக்கத்திற்கும். போற்றுதற்குமுரிய அருந்தமிழ்த் துறவி அருணகிரிநாதர் ஆதீனம் அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மறைவெய்திய செய்தியறிந்து பேரதிர்ச்சியும், பெருந்துயரமும் அடைந்தேன். வீரசைவ நெறிநின்று தமிழர் மெய்யியலை உலகமெங்கும் கொண்டு சேர்க்கும் பெரும்பணியில் ஈடுபட்டிருந்தபோதும் தமிழையும், தமிழ்நாட்டு மக்களையும் இருகண்கள் என நேசித்து வாழ்ந்த மதுரை ஆதீனம் அருணகிரிநாதரின் மறைவுவென்பது தமிழ்த்தேசியத்திற்கே ஏற்பட்ட பேரிழப்பாகும். தமிழர்கள் இந்துக்கள் அல்லர் என்ற பேருண்மையைப் பல இடங்களிலும் அழுத்தம் திருத்தமாகப் பதிவு செய்தவர் தவத்திரு அருணகிரிநாதர் ஆதீனம் அவர்கள். உண்மையான வழிபாடு என்பது உள்ளன்போடு மக்களுக்குச் செய்யும் பெருந்தொண்டுதான் என்று தனது சொல்லாலும், செயலாலும் உணர்த்திய பெருந்தகை, மதுரை ஆதீனம் அவர்கள். மதவாதக் கொடுங்குரல்கள் தமிழ்நாட்டில் தலையெடுத்த போதெல்லாம். அதன் அடிவேரை அறுத்தெறியும் வகையில், அனைத்து சமயத்தவரையும் அன்பொழுக அரவணைத்து. அருள்நெறி சிதையாது தமிழர் அறம் காத்த அவரது அரும்பணிகள் என்றென்றும் நினைவுகூரத்தக்கவை. அன்னைத் தமிழ்மொழி அரியணை ஏறவும். ஈழத்தாயகம் விடுதலை பெறவும், ஆதரவாய் நின்ற மதுரை ஆதீனம் அவர்கள். தமது இணையற்ற தமிழுணர்வினால் மற்ற தமிழ்ச்சமயப் பெரியோர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கினார். சமயத்தொண்டோடு நின்றுவிடாமல் மதம் கடந்து மனிதநேயம் போற்றிய மாடாதிபதியாகத் திகழ்ந்ததோடு. அரசியல் உள்ளிட்ட பல தளங்களிலும் தமது பங்களிப்பை வழங்கியதுடன், தமிழர் உரிமைக் களங்களிலும் துணிந்து குரல் கொடுத்த பெருந்தமிழர். என் மீதும். நாம் தமிழர் கட்சி மீதும் அளவற்ற அன்பும் நம்பிக்கையும் கொண்டிருந்த திருவருட்செல்வர் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் அவர்களின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. மதுரை ஆதீனம் அவர்களின் மறைவால் துயருற்றுள்ள, சமயப் பெரியோர்களுக்கும், அருள் நெறியாளர்களுக்கும். தமிழக மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்து. அவர்களது துயரத்தில் பங்கெடுக்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.