மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் என்றும், அவரது சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் என்றும் வாசுதேவன் என்பவர் தொடர்ந்த வழக்கில் தீபா மற்றும் தீபக் பதில் சொல்ல சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 


கர்நாடக மாநிலம் மைசூர் வியாசரபுராவைச் சேர்ந்த 83 வயதான வாசுதேவன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் இது தொடர்பாக மனு தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், “தான் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் சகோதரர், ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமனின் முதல் மனைவியின் மகன் என்றும்” குறிப்பிட்டிருந்தார். 
 
காலதாமதமாக  மனு தாக்கல் செய்யப்பட்டதால் உயர்நீதிமன்ற நிர்வாக உத்தரவிற்காக மாஸ்டர் நீதிமன்றத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.  மனுவை பட்டியலிடுவது தொடர்பாக தீபா தீபக் ஆகியோர் பதிலளிக்கும்படி, மாஸ்டர் நீதிமன்றம் உத்தரவிட்டு, விசாரணை வரும் பிப்ரவரி 10 ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


 


இதற்கு முன்னர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வருமான வரி, செல்வ வரி தொடர்பாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக வருமான வரித்துறை தாக்கல் செய்திருந்த மூன்று வழக்குகளில், அவரது வாரிசுகளான ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 


மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடந்த 1995ஆம் ஆண்டு அவரது வளர்ப்பு மகன் சுதாகரன் திருமண அலங்காரத்திற்காக 59 லட்சத்து 99 ஆயிரம் செலவு செய்ததாக கூறி, அந்த தொகையை, 1996-97ஆம் மதிப்பீட்டு ஆண்டுக்கான, ஜெயலலிதாவின் வருமான வரி கணக்கில் சேர்த்து மதிப்பீட்டு அதிகாரி உத்தரவிட்டார்.
 


இந்த செலவை, 12 எம்.பி., எம்.எல்.ஏ.-க்களும் சேர்ந்து 57 லட்ச ரூபாயை செலவு செய்ததாக ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்டதை ஏற்று, பழைய உத்தரவை ரத்து செய்துவிட்டு, புதிதாக மதிப்பீடு செய்ய வருமான வரித்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்பின்னர் கலை இயக்குனர் தோட்டா தரணி மற்றும் அவரது உதவியாளர்களிடம் மதிப்பீட்டு அதிகாரி விசாரணை நடத்தியபோது, ஜெயலலிதா தான் செலவு செய்தார் என தீர்மானித்து உத்தரவு பிறப்பித்தார்.


அதை  வருமான வரித்துறை  மேல் முறையீட்டு தீப்பாயம் ரத்து செய்தது. இதேபோல சுதாகரன் திருமண நிச்சயதார்த்தத்தின்போது ரூ.8 லட்சம் மதிப்பிலான நகையை கொடுத்ததை, ஜெயலலிதாவின் வருமானத்தில் சேர்க்கப்பட்டது. இதையும் வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது. 


1997-98ல் செல்வ வரி கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை என கூறி, ஆவணங்களின் அடிப்படையில் அசையும் சொத்துகள் 4 கோடி ரூபாய் என வருமான வரித் துறை தீர்மானித்தது. இதிலும் ஜெயலலிதா மனுவை ஏற்று, ஆணையர் உத்தரவை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்தது.


வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயம் ரத்து செய்து பிறப்பித்த மூன்று உத்தரவுகளையும் எதிர்த்து, வருமான வரித்துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ஆம் ஆண்டில் மூன்று வழக்குகளை தொடந்திருந்தார்.


இந்த வழக்குகள் நீதிபதிகள் மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, 2016ல் ஜெயலலிதா இறந்துவிட்டதால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் இந்த மூன்று வழக்குகளிலும் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.