தி.நகரில் விதிமீறல் கட்டிடங்களை அகற்ற வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அனுமதி இல்லாத கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


சென்னை தியாகராய நகரில் வணிக கட்டிடங்களில் அனுமதி இன்றி கட்டப்பட்ட பகுதிகளை 8 வாரங்களில் இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பதற்காக விதி மீறியவர்களுக்கு இரக்கம் காட்டக் கூடாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கட்டிடங்களை இடிக்க CMDA அனுப்பிய நோட்டீஸ்-க்கு எதிராக தாக்கல் செய்த மனு மீது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


அனுமதி இன்றி கட்டப்பட்ட கட்டிடங்கள்:


சென்னை, தியாகராய நகர், பாண்டிபஜாரில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கூடிய வணிக கட்டிடத்துக்கு அனுமதி பெற்று விட்டு, அனுமதியை மீறி, 10 தளங்கள் வரை கட்டிய ஜன்பிரியா பில்டர்ஸ் நிறுவனம், அனுமதின்றி கட்டப்பட்ட கட்டிடத்தை வரன்முறை செய்யக் கோரி சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்திடம் விண்ணப்பித்தது.


இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதை அடுத்து, அரசிடம் மேல் முறையீடு செய்யப்பட்டது. அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து, கட்டிடத்துக்கு சீல் வைத்த சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், கட்டிடத்தை இடிப்பது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பியது.


இதனை எதிர்த்து, கட்டுமான நிறுவனம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. 


நீதிபதிகள் கூறியது என்ன?


இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு, கட்டுமானத்தை வரன்முறை செய்ய மறுத்து, பெருநகர வளர்ச்சிக் குழுமம், தமிழக அரசுகள் பிறப்பித்த உத்தரவுகளை எதிர்த்து வழக்கு தொடராத கட்டுமான நிறுவனம், கட்டுமானத்தை இடிக்க எடுத்த நடவடிக்கையை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.


மேலும், எட்டு வாரங்களில் அனுமதில்லாமல் கட்டப்பட்ட தளங்களை இடிக்க நடவடிக்கை எடுக்கும்படி, பெருநகர வளர்ச்சி குழுமத்துக்கும், சென்னை மாநகராட்சிக்கும்  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டுமானங்களை வரன்முறை செய்ய வேண்டும் என உரிமையாக கோர முடியாது. வரன்முறை சலுகையை வழக்கமான நடைமுறையாக அரசு மேற்கொள்ளக் கூடாது என நீதிபதிகள் அறிவுறுத்தினர்.


ஒருபுறம் கட்டிட திட்ட அனுமதியை வலியுறுத்தும் அதிகாரிகள், மறுபுறம் அவற்றை வரன்முறை செய்யக் கோரும் விண்ணப்பங்களை ஏற்பதன் மூலம் சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டப்பூர்வமாக்குவதாக நீதிபதிகள்  தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.


அனுமதியில்லாமல் கட்டுமானங்கள் நீடிக்க அனுமதிக்கக் கூடாது. விதிமீறல் கட்டுமானங்கள் குறித்து புகார் வந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டும். பெருந்தொகை முதலீடு செய்யப்பட்டுள்ளது என்ற காரணத்துக்காக விதிமீறியவர்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது என, நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.