தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீதான அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதற்கு அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மாநகர குற்றவியல்  வழக்கறிஞர் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 


2016இல் அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக விமர்சித்ததாக  அப்போதைய எதிர்கட்சித் தலைவர்  மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. 


இனிக்கும் இளமை' என்ற திரைப்படத்தின் மூலம் 1978-ம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார். இவருக்கு, அப்படத்தின் இயக்குநர் எம்.ஏ.காஜா வைத்த பெயர்தான் விஜயகாந்த்.1980-ல் வெளியான 'தூரத்து இடி முழக்கம்' திரைப்படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார் விஜயகாந்த். 1981-ல் வெளிவந்த எஸ்.ஏ.சந்திரசேகரின் சட்டம் ஒரு இருட்டறை திரைப்படம் அபார வெற்றிப்பெற்றது. அறிமுக இயக்குநராக எஸ்.ஏ.சி க்கும் மட்டுமல்லாமல் , விஜயகாந்திற்கு மிகப்பெரிய மார்க்கெட்டை அப்படம் உருவாக்கி கொடுத்தது. அதன் பிறகு எஸ்.ஏ.சி மற்றும் விஜயகாந்த் கூட்டணியில் கிட்டத்தட்ட  17 படங்கள் வெளியானது. அனைத்துமே சூப்பர் ஹிட். ஆக்‌ஷன் காட்சிகள் , புரட்சியான வசனங்கள் என விஜயகாந்தின் படங்கள் அனைத்துமே அதிரடி காட்டியதால் 1985-ம் ஆண்டு முதல் அவருடைய ரசிகர்களால் 'புரட்சிக்கலைஞர்' என அழைக்கப்பட்டார். கமல் , ரஜினி ஒரு ஜானரில் போட்டி போட மண் வாசம் மணக்க மணக்க , தனக்கென தனி பாணியை உருவாக்கி மக்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார்.


விஜகாந்த் சினிமாவாக இருந்தாலும் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் தனக்கென தனி கொள்கைகளை வைத்திருந்தார். நடிக்கும் பொழுதே பொது பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்த வெகு சில நடிகர்களுள் விஜயகாந்தும் ஒருவர். இந்தி எதிர்ப்பு போராட்டம் உள்ளிட்ட பல பிரச்சினைகளுக்கு ஆதரவாக இருந்த விஜயகாந்த் , தமிழ் மீது கொண்ட பற்றினால் பிந்நாட்களில் வேற்று மொழி படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டார். 2009ல் இலங்கையில் போர் உச்சத்தில் இருந்த சமயத்தில் நடிகர் மணிவண்ணன் எழுதிய நாடகம் ஒன்று பெரியார் திடலில் அரங்கேற்றப்பட்டது. அதில் முக்கியப் பாத்திரத்தில் நடித்து  அதில் வந்தப் பணத்தை ஈழத்துக்காக எடுத்துக் கொடுத்த விஜயகாந்தைப் பற்றி ஒவ்வொரு முறையும் சிலாகிப்பார் சத்யராஜ். ‘ ஈழத்துக்காக நிதியுதவி அளித்த முதல் தமிழ் நடிகர்’  விஜயகாந்த்தான் என்பார் அவர். விருந்தோம்பல் தமிழனின் அடையாளம் என்பார்கள். அதற்கு மிகச்சிறந்த உதாரணம் விஜகாந்த் . நடிகர்கள் முதல் சாமானியர்கள் வரை  பசிக்கு உணவளிக்கும் வள்ளல் என்பார்கள்.


 சினிமாவை போல அரசியலிலும் மிகப்பெரிய ஆளுமை செலுத்தியவர் விஜயகாந்த்.திமுக - அதிமுக என இரண்டு மாநிலக் கட்சிகள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வந்த தமிழ்நாட்டில் ’கேப்டன்’ விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் உருவானது  கருணாநிதி ஜெயலலிதாவின் டாம் அண்ட் ஜெர்ரி அரசியலால் போரடித்துப்போன மக்களுக்குக் கொஞ்சம் ஆசுவாசத்தைக் கொடுத்தது எனலாம். 2005ல் கட்சித் தொடக்கம் 2011ல் அடுத்த எடுப்பிலேயே எதிர்கட்சித் தலைவர் என அவர் சிக்ஸர் அடித்தது கழகங்களை கதிகலங்கச் செய்தது எனலாம். எதிர் கட்சித் தலைவராக இருந்த விஜஜகாந்த் சட்டமன்றம் மற்றும் பொது வெளியில் அதிமுக மற்றும் ஜெயலலிதா குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். 


இதனால் அப்போதைய எதிர்கட்சித் தலைவர்  மற்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதனை வாபஸ் பெற சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.