தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவற்காக மாநில அரசு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. இதன்காரணமாக, கடந்த 10-ஆம் தேதி முதல் வரும் 24-ஆம் தேதி (நாளை மறுநாள்) வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கொரோனா பரவல் தொடர்பாக மருத்துவ குழுவினருடன் ஆலோசனை நடத்தினார்.


இந்த ஆலோசனையில் ஊரடங்கை இரண்டு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து, தமிழக அரசு ஊரடங்கை ஒரு வாரம் நீட்டித்து சற்றுமுன் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.


தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது,


“ தமிழகத்தில் பெருந்தொற்றை கட்டுப்படுத்த தற்போதுள்ள ஊரடங்கினை வரும் 24-ஆம் தேதி முதல் மேலும் ஒரு வாரத்திற்கு முழுமையாக எந்தவித தளர்வுகளும் இன்றி தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும். இந்த ஊரடங்கு வரும் 24-ஆம் தேதி காலை முதல் நடைமுறைக்கு வரும்.


இந்த ஊரடங்கில் கீழ்க்கண்ட செயல்பாடுகள் மட்டும் அனுமதிக்கப்படும்.



  • மருந்தகங்கள், நாட்டு மருந்து கடைகள், கால்நடை மருந்தகங்கள்

  • பால் விநியோகம், குடிநீர் விநியோகம், தினசரி பத்திரிகை விநியோகம்

  • காய்கறிகள், பழங்கள், தோட்டக்கலைத்துறை மூலமாக சென்னை நகரத்திலும், அனைத்து மாவட்டங்களிலும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து வாகனங்கள் மூலமாக வழங்கப்படும்.

  • தலைமை செயலகத்திலும், மாவட்டங்களிலும், அத்தியாவசியத் துறைகள் மட்டும் இயங்கும்.

  • தனியார் நிறுவனங்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிவோர்கள் வீட்டில் இருந்தே பணிபுரிய கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

  • மின்னணு சேவை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்கலாம்.

  • உணவகங்களில் காலை 6 மணி முதல் 10 மணி வரையிலும், பகல் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது.

  • ஸ்விகி, ஜோமோட்டோ நிறுவனங்களும் மேற்குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே இயங்க வேண்டும்.

  • பெட்ரோல், டீசல் பங்குகள் வழக்கம் போல் இயங்கும்

  • ஏ.டி.எம். சேவைகள் அனுமதிக்கப்படும்.

  • வேளாண் பொருட்கள், இடுபொருட்களை கொண்டு செல்ல அனுமதிக்கப்படும்.

  • சரக்கு வாகனங்கள் செல்லவும், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லவும் அனுமதிக்கப்படும்.

  • உரிய மருத்துவ காரணங்கள், இறப்புகளுக்காக மட்டுமே மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பதிவுடன் அனுமதிக்கப்படும்.

  • மருத்துவ காரணங்களுக்காக மாவட்டத்திற்குள் பயணிக்க இ-பதிவு தேவையில்லை.

  • ஊடக நிறுவனங்கள் வழக்கம்போல் இயங்கலாம்.

  • தொடர் செயல்முறை தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டபடி இயங்கலாம்.

  •  பொதுமக்கள் நலன் கருதி இன்று இரவு 9 மணி வரையிலும், நாளை ஒரு நாள் மட்டும் 6 மணி முதல் இரவு 9 மணி வரை அனைத்துக்டைகளும் திறக்க அனுமதிக்கப்படுகிறது.



  • மால்கள் திறக்க அனுமதி கிடையாது.

  • வெளியூர் செல்லும் பயணிகள் நலன் கருதி, இன்று மற்றும் நாளை தனியார் மற்றும் அரசு பேருந்துகள் வெளியூர் செல்வதற்கு அனுமதிக்கப்படும்.


பொதுமக்கள் அத்தியாவசிமின்றி வெளியில் வர வேண்டாம். பொதுமக்கள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.