சேலம் மாவட்டத்தில் ஆடி 18 அன்று ஆடிப்பெருக்கு மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினத்தை முன்னிட்டு 03.08.2024 சனிக்கிழமை அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார். 


இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி வெளியிட்டுள்ள அறிக்கையில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள் மற்றும் ஆடி 18 ஆடிப்பெருக்கு தினத்தை முன்னிட்டு வருகின்ற 03.08.2024, சனிக்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு, சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி, கல்லூரிகளுக்கு வருகின்ற சனிக்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது" என சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி உத்தரவிட்டுள்ளார்.


மேலும் ஆடி 18 அன்று பக்தர்கள் புனித நீராடுவது வழக்கம். காவிரி ஆற்றில் குளிப்பதற்காக பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவார்கள். காவிரி நீர் பிடிப்பு பகுதியில் தொடர் மழை காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த ஆண்டு ஆடி 18 அன்று மேட்டூர் அணையில் புனித நீராட தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதுவரை மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்த விதமான பதிவிப்போம் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



சேலம் மாவட்டத்தில் ஆடி பண்டிகை என்பது மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்றாகும். ஆடி மாதம் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அன்று சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் ஆடிப் பண்டிகை தொடக்கமாக அம்மனுக்கு பூச்சாட்டு விழா மிகச் சிறப்பாக நடைபெறும். குறிப்பாக சேலம் மாநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை மாரியம்மன் திருக்கோவில் சுற்றியுள்ள அனைத்து மாரியம்மன் கோவிலுக்கும் பெரிய மாரியம்மனாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் பூச்சாட்டு நிகழ்ச்சி விமர்சியாக நடைபெற்றது. கோட்டை மாரியம்மன் திருக்கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு. பின்னர் பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்த பத்து டன் மலர்களைக் கொண்டு பூச்சாட்டு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.


இதன்பின் வருகின்ற 06 ஆம் தேதி இரவு சக்தி அழைப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பின்னர் 07, 08 மற்றும் 09 ஆம் தேதிகளில் விழாவில் முக்கிய நிகழ்வாக பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல் மற்றும் பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சிகள் நடக்க உள்ளது. தொடர்ந்து 13 ஆம் தேதி அன்று பால்குட ஊர்வலம் மற்றும் மகா அபிஷேகத்துடன் விழாவுடன் நிறைவு பெறும்.


இந்த மாதம் முழுவதும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அம்மன் திருக்கோவில்களிலும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்படும். தொடர்ந்து 22 நாட்கள் நடைபெறும் ஆடி பண்டிகை பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஆடி இரண்டாம் வாரம் கம்பம் நடுவது, மூன்றாம் வாரம் பூ கரகம் எடுப்பது, அலகு குத்துதல், பொங்கல் வைப்பது, வண்டி வேடிக்கை போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறும். சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில்களில் அசம்பாவிதங்களை தடுக்க கோவில்களில் தற்காலிக சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையினரால் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. சேலம் மாநகர பகுதியில் மட்டும் 1000க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.