இன்று மறைந்தார் ட்ராஃபிக் ராமசாமி. நாம் தினம் தினம் செய்திகளின் வழியாக அந்த “காமன் மேன்” ராமசாமி காலமாகிவிட்டார். பல்வேறு வழக்குகளில் சட்டப்போராட்டம் நடத்தி மக்களிடையே அறியப்பட்டவர் ட்ராபிக் ராமசாமி. வயது முதிர்ந்த காலத்திலும் இவர் எளிய மக்களுக்காக குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த  ட்ராபிக் ராமசாமி இன்று மாலை காலமானார். உங்களுக்கு தொலைக்காட்சிகளிலும், செய்தித்தாள்களிலும் கடந்து போகும் பெயராகவே ட்ராஃபிக் ராமசாமி இருந்திருந்தால், அவரைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய கதை இருக்கிறது. 




தள்ளாடும் வயதில் இந்த ட்ராபிக் ராமசாமி நடத்தும் சட்டப் போராட்டம் இன்று நேற்று தொடங்கியது அல்ல. அவருடைய 14 வயதில் தொடங்கியது. தன்னுடைய 14 வயதில் பேருந்தில் 10 கிலோ அரிசியோடு சென்றுள்ளார் ட்ராஃபிக் ராமசாமி. அப்போது அரிசி கட்டுப்பாட்டுச் சட்டம் அமலில் இருந்த நேரம். அச்சட்டத்தின் படி 10 கிலோ வரை யாருவேண்டுமானாலும் அரிசியை கொண்டு செல்லலாம். அதற்கு மேல் கொண்டுசெல்ல அனுமதி வாங்க வேண்டும். ஆனால் ட்ராபிக் ராமசாமியின் 10 கிலோ அரிசியை வட்டாட்சியர் வழிமறித்து பிடுங்கியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 14 வயது பாலகன் 3 பைசா கார்டில் மாவட்ட ஆட்சியருக்கு புகார் அளித்துள்ளார். அந்தப்புகாரால் பிடுங்கி செல்லப்பட்டுச் சென்ற அரிசி ராமசாமியின் வீடு வந்திருக்கிறது. அந்த வட்டாட்சியர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். நியாயப்படி கோரிக்கை வைத்தால் சட்டம் தன் கடமையை செய்யும் என அன்றே உணர்ந்த ராமசாமி அதன் பின்னர் நியாயக் கோரிக்கையுடன் போராடத் தொடங்கியுள்ளார். 




நியாயமும், நேர்மையும் ஊரில் உள்ளவர்களிடம் மட்டுமல்ல சொந்த வீட்டில் இருந்தே தொடங்கவேண்டுமென்பதிலும் ராமசாமி திடமாய் இருந்துள்ளார். ராமசாமியின் திருமணத்திற்கு அவர் அப்பா வரதட்சனை கேட்க, விடாப்பிடியாக வரதட்சனையை மறுத்த ராமசாமி பெற்றோர்களின் எதிர்ப்பையும் மீறி வரதட்சனை இல்லாமல் அதே பெண்ணை கரம்பிடித்த நாயகனாக இருந்துள்ளார். வறுமையில் எதிர்த்து நீச்சல்போட்ட ராமசாமி, ஏ.எம்.ஐ.ஈ படித்து பொறியாளரானார். பின்னர் வாழ்க்கை அவரை சமூக சேவை பக்கமே திருப்பியது. சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் ஓடிச்சென்று போக்குவரத்தை சீர்செய்வார். இந்த சேவையே ராமசாமியை, ட்ராஃபிக் ராமசாமி ஆக்கியது.




ஆளும் கட்சி, எதிர்க்கட்சி, போலீசார், குண்டர்கள், தொழிலதிபர்கள் என எதிரே யார் நிற்கிறார்கள் என்பதையெல்லாம் கவனிப்பதில்லை. நியாயத்திற்கு எதிராக யார் நின்றாலும் அவருக்கு எதிராக தனி ஆளாய் நின்ற தான் ட்ராபிக் ராமசாமி. தன்னுடைய வழக்குகளால் பல இடர்ப்பாடுகளை சந்தித்துள்ளார் இந்த One Man Army. பொய் வழக்குகளால் சிறைத்தண்டனை பெறுவது, கொலை மிரட்டல்கள், தாக்குதல்கள் என ராமசாமி பல விதங்களிலும் அலைக்கழிக்கப்பட்டார். ஆனால் எதற்கும் அஞ்சாத ராமசாமி மீண்டும் மீண்டும் அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுத்தே வந்தார். அந்தக்குரல்தான் இன்று ஓய்ந்திருக்கிறது.