இந்தியத்‌ துணைக்‌ கண்டத்தின்‌ வரலாறு தமிழ்‌ மண்ணிலிருந்து எழுதப்படட்டும் என்று பொருநை இலக்கியத்‌ திருவிழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். பாளையங்கோட்டையில்‌ இன்று மற்றும்‌ நாளை நடைபெறும்‌ பொருநை இலக்கியத்‌ திருவிழாவிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


’’தமிழ்ச்‌ சமூகமானது இலக்கிய முதிர்ச்சியும்‌, பண்பாட்டின்‌ உச்சத்தையும்‌ அடைந்த பெருமைக்குரிய சமூகம்‌!கீழடியைத்‌ தொடர்ந்து சிவகளை, கொற்கை என பல அகழ்வாய்வுகள்‌ வழியாகவும்‌ பல்வேறு முன்னெடுப்புகள்‌ வழியாகவும்‌ அறிவியல்பூர்வமாக நிறுவப்படும்‌ நமது தொன்மை நம்முடைய பெருமை. இந்தப்‌ பெருமையினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சென்று, அறிவுசார்‌ சமூகத்தை வார்த்தெடுக்கும்‌ இலக்குடன்‌ இலக்கியத்‌ திருவிழாக்கள்‌ நடைபெற உள்ளன.


தமிழின்‌ செழுமைமிகு இலக்கிய மரபுகளைப்‌ போற்றும் விதமாக பொருநை, வைகை, காவிரி, சிறுவாணி, சென்னை என ஐந்து இலக்கியத்‌ திருவிழாக்களைத்‌ தமிழ்நாடு அரசு நடத்துகிறது. இதில்‌ முதல்‌ நிகழ்வாக, அன்னைமடியான பொருநை ஆற்றங்கரையில்‌ முன்னெடுக்கப்பட்டிருக்கும்‌ இந்த இலக்கியத்‌ திருவிழா சிறந்ததொரு முயற்சி.






 


"அறிவை விரிவு செய்‌, அகண்டமாக்கு” என்று பாவேந்தர்‌ சொன்னதற்கு இணங்க நமது தமிழ்‌ மண்ணின்‌ செழுமைமிக்க இலக்கிய பண்பாட்டினை உலகிற்குப்‌ பறைசாற்ற நடைபெறும்‌ பொருநை இலக்கியத்‌ திருவிழாவிற்கு எனது வாழ்த்துகள்‌! இந்தியத்‌ துணைக்‌ கண்டத்தின்‌ வரலாறு தமிழ்‌ மண்ணிலிருந்து எழுதப்படட்டும்‌!’’


இவ்வாறு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.






முன்னதாக, நதி நாகரிங்களின் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் இலக்கியத் திருவிழாக்கள் நடத்தப்படும் என கடந்த மானியக் கோரிக்கையின்போது பள்ளிக் கல்வித்துறை சார்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். அதன் தொடக்கமாக தமிழ்நாடு முதலமைச்சர், பொருநை இலக்கியத் திருவிழாவைத் தொடங்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.