சென்னையில் மிக குறைவான வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது ஒரு தலைகுனிவான நிகழ்வு என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார்.


விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது எப்போது வழங்கப்படுகிறது?


சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கோடைக்கால சிறப்பு குளிர்பான தண்ணீர் பந்தலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். அப்போது பேசிய அவர், வரும் 9 ஆம் தேதி விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட உள்ளதாக தகவல் கூறினார்.


பின்னர் செய்தியாளர்களிடம் விரிவாக பேசிய அவர், "தமிழகம் முழுவதும் வெயிலில் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அக்னி நட்சத்திரம் மற்றும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கும் அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது.


மக்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் தேமுதிக சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்துள்ளோம். அதே போல, தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல்  திறந்து வைக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தால் ஜூன் மாதத்தில் பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாம். தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் கடந்த ஒரு மாதங்களாகவே விருதுநகரில் தங்கி இருந்து தனது தேர்தல் பணிகளை முடித்துள்ளார். பெரும்பாலான மக்கள் விஜய பிரபாகரனுக்கு வாக்களித்ததாக கூறினார்" என்றார்.


"பிரதமர் கவனமாக பேச வேண்டும்"


சென்னையில் பொறுத்தவரை பல்வேறு நபர்களுக்கு வாக்கு இல்லை என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், " தேர்தலுக்கு முன்பாகவே வாக்குச்சீட்டில் பெயர் உள்ளதா என்பதை பார்க்காமல் வாக்கு செலுத்த வரும் பொழுது தான் மக்கள் தங்கள் பெயர் உள்ளதா என பார்க்கிறார்கள்.


சென்னையில் பொருத்தவரை எத்தனை பேர் வாக்களித்துள்ளார்கள் என்ற கேள்வியை நான் எழுப்புகிறேன்.  
ஜனநாயக கடமை ஆற்றுவது ஒவ்வொரு குடிமகனின் உரிமையா இல்லையா? தேர்தல் ஆணையம் சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தும் மக்கள் வாக்களிக்கவில்லை.


அப்பார்ட்மெண்டில் இருப்பவர்கள் வெயில் தாக்கத்தால் ஓட்டு போட செல்லவில்லை என்று கூறுவது எப்படி நியாயமாக இருக்கும். இந்தியர்கள் ஒவ்வொருவருக்கும் எப்படி ஆதார் கார்டு உள்ளது. அதேபோல் ஒவ்வொரு நபர்களும் வாக்களிக்க வேண்டும் என்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்ய வேண்டும். இதனை நான் ஒரு கோரிக்கையாக வைக்கிறேன்.


பிரதமரின் சர்ச்சைக்குரிய கருத்துகள் குறித்து பேசிய அவர், "நீலகிரி ஸ்ட்ராங் ரூமில் 4 மணி நேரம் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்பது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதமர் உடைய வார்த்தை ஒவ்வொன்றும் உன்னிப்பாக கவனிக்கப்படக்கூடியவை. அதனால் அவர் கவனமாக பேச வேண்டும்.


பாஜக என்றால் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் என்ற நிலை இருக்கக்கூடிய சூழ்நிலையில் முகநூல் உடைய ஒவ்வொரு வார்த்தையும் கவனமாக பேச வேண்டும். அதிமுக தேமுதிகவிற்கு தேர்தல் களத்தில் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்" என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "ஆணவ படுகொலை நடைபெறுவது என்பது கண்டிக்கத்தக்கது தான். தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பழக்கம் அதிகரித்து வருகிறது. காவல்துறையினருக்கே பாதுகாப்பு இல்லை" என்றார்.