என்எல்சி சுரங்க விரிவாக்க பணிக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமம் செய்யும் பணியை தடுத்து நிறுத்திய புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழித் தேவன் மற்றும் அதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

 

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் மின் உற்பத்திக்காக சுரங்க விரிவாக்க பணிகளுக்கு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமம் செய்யும் பணியினை கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வளையமாதேவி என்ற இடத்தில் நேற்று தொடங்கியது.

 

நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை வாய்ப்பு, வழங்க கோரியும், கடந்த முறை நிலம் கொடுத்த விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு உரிய இழப்பீடு தராத என்எல்சி நிறுவனத்திற்கு நிலங்களை தரமாட்டோம் என கத்தாழை, கரிவெட்டி, வளையமாதேவி உள்ளிட்ட 17 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் காவல்துறையின் உதவியோடு கையகப்படுத்தப்பட்ட நிலங்களை சமன் செய்யும் பணியினை மாவட்ட நிர்வாகமும் என்எல்சி நிறுவனமும் மேற்கொண்டது. மேலும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் ஏற்படாமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் குழுவில் ஈடுபட்டிருந்தனர்.



   
  

கடலூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் என்எல்சி நிறுவனம், மற்றும் விவசாயிகளுடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதன்படி கையகப்படுத்தப்பட்ட இடங்களுக்கு கூடுதல் இழப்பீடு வேலைவாய்ப்பு போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இரண்டாவது நாளாக கையகப்படுத்தப்பட்ட பணிகளை சமம் செய்யும் பணி நடைபெறுவதாக புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன் வளையமாதேவி பகுதிக்கு வருகை தந்த அவர் வளையமாதேவி கிராமத்தில் விழுப்புரம் சரக டிஐஜி பாண்டியனிடம் பணிகளை நிறுத்த வேண்டுமென கூறினார். மேலும் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்திய எம்எல்ஏ அருண்மொழித் தேவன் என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக கண்டனம் முழக்கமிட்டனர். எம்எல்ஏவுடன் வந்த அதிமுகவினர், விவசாயிகள், பொதுமக்கள் உள்ளிட்ட சுமார் 30 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.