குவைத்தில் ஏற்பட்ட தீ விபத்து:


குவைத் நாட்டின் மங்காப் நகரில் உள்ள கட்டடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. இந்த கட்டடத்தில் சுமார் 195 பேர் இருந்ததாகவும், அவர்கள் அனைவரும் ஒரே நிறுவனத்துக்காக வேலை பார்ப்பவர்கள் என்றும் கூறப்படுகிறது. இச்சூழலில் தீ விபத்தில் ஏற்பட்ட புகையால், மூச்சுவிட முடியாமல் பலர் இறந்துள்ளனர்.  இந்த விபத்தில் 49 பேர்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


அதேபோல் 7 தமிழர்கள், 23 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள் என மொத்தம் 45 இந்தியர்கள் உயிரிழந்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அந்த கட்டடத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 25 பேர் வசித்து வந்ததாக தகவல் தெரிவிக்கின்றன. 10 பேர் இரவுநேர வேலைக்குச் சென்றதால், பாதிப்பில் இருந்து தப்பினர்.


உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை:


இந்நிலையில் மீதமுள்ள 15 பேரில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் தெரிவித்த நிலையில், மீதமுள்ள 8 பேரின் நிலை என்ன என்பது குறித்து இதுவரை தெரியவில்லை.  இதனிடையே இந்த  தீ விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைத்திட தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார்.



இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,” குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில், 12-6-2024 அன்று ஏற்பட்ட தீ விபத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த வீராசாமி மாரியப்பன், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த எபமேசன் ராஜு, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி சின்னதுரை, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த கோவிந்தன் சிவசங்கர், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த புனாஃப் ரிச்சர்ட் ராய், இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கருப்பணன் இராமு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த முகமது ஷெரிப் ஆகிய தமிழர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சியும், மனவேதனையும் அடைந்து வருகிறேன்.


உயிரிழந்தவர்களின் உடல்களை தமிழ்நாட்டிற்கு உடனடியாகக் கொண்டு வருவதற்குக் குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகம் மற்றும் அங்குள்ள தமிழ் அமைப்புகளுடன் இணைந்து, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அயலகத் தமிழர் நலத்துறைக்கு உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளேன். அதன் பயனாக, உயிரிழந்த ஏழு தமிழர்களின் உடல்களும், தனிவிமானத்தின் மூலம் இந்தியாவிற்குக் கொண்டுவர விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


இந்தியாவை வந்தடையும், தமிழர்களின் உடல்களை உடனடியாகத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்து, அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணிகளை அரசு தமிழ்நாடு மேற்கொண்டுள்ளது.


நிதியுதவி அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்:


இந்நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பம் ஒவ்வொன்றுக்கும், தமிழ்நாடு அரசின் சார்பில் தலா 5 இலட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.


இது மட்டுமல்லாமல், இந்தக் கொடிய தீவிபத்தில் காயமடைந்து, குவைத் நாட்டிலேயே, சிகிச்சை பெற்று வரும் நம் தமிழ்ச்சொந்தங்கள் தொடர்பான விவரங்களைத் திரட்டிடுமாறு அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு நான் அறிவுரை வழங்கியதையொட்டி, உரிய நடவடிக்கைகளை அத்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய தேவையான உதவிகளை குவைத் நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து அயலகத் தமிழர் நலத்துறை துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.


குவைத் நாட்டில் பணிபுரிந்து வரும் தமிழர்கள், அங்கு கொடிய தீவிபத்திற்கு ஆளானதுடன், உயிர்களை இழந்தும், தீக்காயங்களுக்குச் சிகிச்சைகள் பெற்றும் வரும் நிலையை எண்ணி, வேதனையில் ஆழ்ந்துள்ள என் அருமை தமிழ்நாட்டு உறவினர்களுக்கு. தமிழ்நாடு அரசு எல்லா உதவிகளையும் வழங்கிடத் தயாராக இருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


மேலும், இந்த விபத்து தொடர்பான விவரங்களை அறிந்து கொள்வதற்கு அயலகத் தமிழர் நலத்துறையின் கீழ்க்காணும் தொலைபேசி எண்களைத் தொடர்பு இந்தியாவிற்குள் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி எண். +91 1800 309 3793 அதே போன்று குவைத் நாட்டில் தொடர்பு கொள்வதற்கு உரிய தொலைபேசி 6 +91 80 6900 9900, +91 80 6900 9901 வாயிலாகவும், அயலகத் தமிழர் நலத்துறையைத் தொடர்பு கொண்டு தேவைப்படும் தகவல்களைப் பெற்றிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.