கரூர் கலெக்டர் அலுவலகத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக விஏஓவினருக்கான திறன் வளர்ப்பு பயிற்சி நடந்தது. பயிற்சியினை கலெக்டர் பிரபுசங்கர் தொடங்கி வைத்து பேசியதாவது; குழந்தைகள் திருமணம், குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக நிமிர்ந்து நில் துணிந்து செல் இயக்கம் மூலம் மாணவிகளுக்கு வாட்ஸ்அப் எண் வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலம் புகார்கள் வந்து கொண்டுள்ளது. அதன் மீது நடவடிக்கை எடுத்து வருகிறோம். விஏஓவினர் நீங்கள் சமூகப் பொறுப்புணர்வுடன் உங்கள் பகுதிகளை கவனிக்க வேண்டும். குழந்தைகளுக்கு ஏற்படும் பாதுகாப்பு குறைபாடுகள் தொடர்பாக கவனிக்க வேண்டும். குழந்தை திருமணம் கண்டிப்பாக தடுக்கப்பட வேண்டும்.




 


மிகச்சிறந்த மருத்துவ வசதிகள் இருந்தும் சிசு மரணங்கள் நடந்து வருகிறது. அதற்கு காரணம் 18 வயதுக்குக் கீழே உள்ள பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்வதால்தான். அப்படி 18 வயதிற்கு குறைவாக திருமணம் செய்துகொண்ட பெண் குழந்தைகள் குழந்தை பெற்றுக் கொண்டால் உடல் எடை, சத்து குறைவாக இருக்கும், இதனால் சிசு மரணங்கள் ஏற்படுகிறது. 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை நமது  மாவட்டத்தில்  52 ஆயிரம் குழந்தைகள் படிக்கிறார்கள். அதில் 3 ஆயிரம் பெண் குழந்தைகள் தொடர்ந்து பள்ளிக்கு வராமல் உள்ளனர். இது மிகவும் மன வேதனை அளிக்கக்கூடியதாகும். இதற்கு காரணம் இளவயது திருமணம் தான்.






விஏஓவினர் உங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதியில் இரும்பு கரம் கொண்டு குழந்தை திருமணத்தை கட்டுப்படுத்த வேண்டும். சைல்டு லைன் போன் எண் 1098 மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். ஒவ்வொரு மாதமும் 2வது புதன்கிழமை உங்களுக்கான கூட்டம் நடக்கும் அதில் உங்கள் புகார்களை பதிவு செய்யலாம். அதன் மீது விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க முடியும்.


புகார்கள் வராத காரணத்தினால் நடவடிக்கை எடுக்காத சூழ்நிலை ஏற்படுகிறது. இனி மேல் வரும் புகார்கள் மீது கண்டிப்பாக காவல்துறை மூலம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. குழந்தை திருமணம் செய்து வைப்பவர்கள் அனைவரது மீதும் வழக்கு தொடுக்க கூடிய சட்ட உரிமை உள்ளது. கடந்த முறை நடந்த கிராமசபை கூட்டத்தில் நீடித்த நிலையான வளர்ச்சி தொடர்பான 9 வகையான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. அதில் ஒன்று குழந்தை நேய கிராமங்களாக 157 ஊராட்சிகளிலும் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.




எனவே அடுத்த தலைமுறையின் மாற்றத்தை ஏற்படுத்த நீங்கள் சிறப்பாக பணியாற்றிட வேண்டும். இனிமேல் பெண்ணிற்கு 18வயது  நிறைவு பெற்றுள்ளது என்ற விஏஓவினர் சான்று பெற்ற பின்னரே திருமண மண்டபங்களில் முன்பதிவு செய்யப்படும் என்ற ஒரு சூழலை உருவாக்கியுள்ளோம். எனவே சிறப்பாகப் பயிற்சி பெற்று மன நிறைவோடு சமுதாய வளர்ச்சிக்காக பணியாற்றிட வேண்டும் என்று பேசினார்.


டிஆர்ஓ லியாகத், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் சைபுதீன், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் குணசீலி, சமூகபாதுகாப்பு துறை மண்டல நன்னடத்தை அலுவலர் சரவணகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.