முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரியில் உள்ள கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி கொள்ளை சம்பவம் நடைபெற்றது. இரவில் ஆயுதங்களுடன் எஸ்டேட்டுக்குள்  அத்துமீறி நுழைந்த கும்பல், பாதுகாவலராக இருந்த ஓம்பகதூர் என்பவரை கொலை செய்து விட்டு, சில மதிப்புமிக்க பொருட்களை திருடிச் சென்றது. இது தொடர்பாக சயன், சதீசன், உதயகுமார், சம்சிர் அலி, தீபு, சந்தோஷ், திலிப் ஜாய், வாளையார் மனோஜ், மனோஜ்  உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு தொடர்பாக உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.




இதனிடையே கோடநாடு வழக்கில் கூடுதல் விசாரணையை துவக்கிய நீலகிரி காவல் துறையினர், முக்கிய குற்றவாளியான சயன் மற்றும் விபத்தில் உயிரிழந்த கனகராஜின் அண்ணன் தனபால் ஆகியோரிடம் விசாரணை செய்தனர். பின்னர் ஏடிஎஸ்பி தலைமையில் 5 தனிப் படைகள் அமைத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சாட்சிகள், குற்றம் சாட்டப்பட்டவர்கள், அவர்களின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் என கூடுதல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோடநாடு பங்களா மேலாளர் நடராஜன், கோத்தகிரி மின்வாரிய பொறியாளர், விபத்தில் உயிரிழந்த கனகராஜின் மனைவி கலைவாணி மற்றும் அவரது உறவினர் தினேஷ், குற்றவாளிகளை கேரளாவிற்கு தப்பிக்க உதவியதாக கூறப்படும் கூடலூர் பகுதியை சார்ந்த அனீஸ் மற்றும் சாஜி ஆகியோரிடம் நீலகிரி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். சம்பவத்தன்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய வாகனங்களை வழங்கிய வாகன உரிமையாளர் நவஷத், இடைத்தரகர் நப்பல் ஆகிய இருவரிடம் இன்று விசாரணை நடத்தப்பட்டது.





கோடநாடு வழக்கில் தொடர்புடைய 5 பேர் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். குறிப்பாக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஓட்டுநர் கனகராஜ், சேலம் மாவட்டத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் 28ஆம் தேதி நடந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அச்சம்பவம் நடந்த மறுநாளான 2017 ஏப்ரல் 29 ஆம் தேதி கனகராஜின் நண்பரும், முக்கிய குற்றவாளியான சயன் கேரள மாநிலம் பாலக்காடு அருகே குடும்பத்துடன் செல்லும் போது கார் விபத்தில் சிக்கினார். அதில் சயனின் மனைவி மற்றும் மகள் இருவரும் உயிரிழந்தனர். இதையடுத்து 2017 ஜீலை 3 ஆம் தேதி கோடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றிய தினேஷ்குமார் என்பவர், தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.




இந்த விபத்து மற்றும் தற்கொலை வழக்குகளில் இரண்டு தனிப்படை காவல் துறையினர் கூடுதல் விசாரணை செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விபத்து மற்றும் தற்கொலை வழக்குகளில் வழக்குப் பிரிவுகளை மாற்ற காவல் துறையினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனகராஜ் விபத்து வழக்கை திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்துதல், கூட்டு சதி ஆகிய பிரிவுகள் சேர்க்கப்படலாம் எனவும், தினேஷ்குமார் தற்கொலை வழக்கு தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது. தினேஷ்குமார் தற்கொலை வழக்குப்பிரிவு மாற்றப்பட்டால், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜன் குற்றவாளியாக சேர்க்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. இதேபோல சயனின் மனைவி மற்றும் மகள் விபத்து வழக்குகளும் மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்குப்பிரிவுகள் மாற்றப்பட்டால், கோடநாடு வழக்கு அடுத்த கட்டத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.