Just In





Kodanad Estate Case: கோடநாட்டில் என்ன நடந்தது? விசாரணை வளையத்துக்குள் சசிகலா! நாளை விசாரணை!?
கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் நாளை சசிகலாவிடம் சென்னையில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெயலலிதாவிற்கு சொந்தமான கோடநாடு கொலை – கொள்ளை வழக்கு, திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு வேகம் எடுத்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் சி.இ.ஓவுமான விவேக் ஜெயராமன் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார்.
அதனை அடுத்து, கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் நாளை சசிகலாவிடம் சென்னையில் விசாரணை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே விவேக்கிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், இப்போது சசிகலாவும் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளார்.
கோடநாடு வழக்கில் பிடிபட்ட கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது சில கைக் கடிகாரங்களும் குரங்கும் பொம்மையும்தான் என போலீசார் தெரிவித்த நிலையில், உண்மையில் கோடநாடு பங்களாவில் என்ன இருந்தது என்பது அந்த பங்களாவிற்குள் ஜெயலலிதாவோடு சென்று வந்த சசிகலா, தினகரன், விவேக், இளவரசி உள்ளிட்டோருக்குதான் தெரியும் என்று கூறப்பட்டு வந்தது. அதனால், போலீசார் சசிகலா-வையும் அவருடன் தொடர்புடையோர்களையும் விசாரணை வளையத்திற்கு கொண்டுவந்தால் மட்டுமே கொள்ளை எதற்காக நடந்தது ? அங்கு என்ன இருந்தது என்பது தெரியும் என பேசப்பட்டு வந்த நிலையில், முதலில் விவேக்கிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர்.
கொள்ளை நடந்த நாளில் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தார் என்பதால், அந்த நேரத்தில் அவரை சிறையில் சென்று பார்த்தவர்களில் விவேக் ஜெயராமன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பங்களாவோடு தொடர்புடையவர்கள் என்பதால், முதலில் விவேக், அடுத்து தினகரன், பின்னர் சசிகலாவிடம் விசாரணை நடத்தவும் தனிப்படை போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதனால், கோடநாட்டில் இருந்த சொத்துகள் என்ன? காணமல் போனது என்ன? போன்றவை குறித்து சசிகலாவிடம் நாளை விசாரணை செய்யப்படும் என தெரிகிறது.
பிற முக்கியச் செய்திகள்:
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்