பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி இன்று அதிகாலை தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 


கைது நடவடிக்கை ஏன்? 


சமீபத்தில் யூ ட்யூப் சேனல் ஒன்றுக்கு மணிப்பூர் கலவரம் தொடர்பாக சர்ச்சையாக பேசியதும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி குறித்து கடுமையாக விமர்சித்திருந்ததும் கைதுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. பத்ரி சேஷாத்ரி மீது மூன்று சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார் என தெரியவந்துள்ளது.


பிரிவு 153 (கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் தூண்டுதல்களை வழங்குவது), 153 ஏ (மதம், இனம், பிறந்த இடம், வசிப்பிடம், மொழி போன்றவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே பகையை வளர்ப்பது, மற்றும் நல்லிணக்கத்தைப் பேணுவதற்கு பாதகமான செயல்களைச் செய்தல் மற்றும் 505 (பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் அறிக்கைகள்) ஆகியவை FIR இல் குறிப்பிடப்பட்டுள்ளன .






இந்த கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, ”பொது மக்களின் கருத்துகளை எதிர்த்து போராடுவதற்காகவே அரசு கைது நடவடிக்கையை மேற்கொள்வதாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார். அந்த பதிவில், “புகழ்பெற்ற பதிப்பாளர், மேடைப் பேச்சாளர் பத்ரி சேஷாத்ரியை தமிழக காவல்துறை இன்று அதிகாலை கைது செய்துள்ளதை தமிழ்நாடு பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. 


சாமானிய மக்களின் கருத்துக்களை எதிர்கொள்ள திராணியற்று கைது நடவடிக்கையை மட்டுமே நம்பி இருக்கிறது இந்த ஊழல் திமுக அரசு. 


ஊழல் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கைகளை செயல்படுத்துவது ஒன்று மட்டும் தான் தமிழக காவல்துறையின் பணியா?” என தெரிவித்திருந்தார்.