நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். 


கோயம்பேடு பேருந்து நிலையம் 


சென்னை மாநகரில் அமைந்துள்ள கோயம்பேடு பேருந்து நிலையம் ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய பேருந்து நிலையம் என்ற பெருமையை கொண்டது. 37 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பேருந்து நிலையத்தில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரம் பேருந்துகள் வந்து சென்று கொண்டிருக்கிறது. 2002 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இப்பேருந்து நிலையத்தை நாள் ஒன்றுக்கு உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் என நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர். சென்னையின் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையத்தை தாம்பரம், குரோம்பேட்டை, ஆலந்தூர், வடபழனி வழியாகவும், மதுரவாயல் பைபாஸ் வழியாகவும் அடையும் நிலை இருந்தது. 


கிளாம்பாக்கம் பேருந்து  நிலையம்


ஆனால் கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் தென் மாவட்ட பேருந்துகளால், சென்னையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு புறநகர் பகுதியில் உள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் ரூபாய் 400 கோடி மதிப்பீட்டில் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஒரே வளாகத்தில் அனைத்து அரசு, தனியார் பேருந்துகளையும் இயக்கும் வசதிகளுடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கட்டி முடிக்கப்பட்டு நீண்ட மாதங்களாகவே திறப்பு விழா காணாமல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இருந்தது. குறிப்பாக மழை காலத்தில் பேருந்து நிலையம் பாதி மூழ்கும் அளவுக்கு இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். 


உடனடியாக துரிதமாக செயல்பட்ட தமிழ்நாடு அரசு மழைநீர் வடிகால் பணிகளை முழு வீச்சில் பேருந்து நிலையத்தில் மேற்கொண்டது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன்பு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு, பொங்கலுக்குள் பேருந்து நிலையம் திறக்கப்படும் என தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்குள்  அரசு பேருந்துகள் அனுப்பப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.


இந்நிலையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். சுமார் 88.52 ஏக்கரில், 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் நவீன தொழில் நுட்ப வசதிகளுடன் இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்திற்கு ‘கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம்’ என பெயரிடப்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது. இந்த பேருந்து நிலையத்திற்கு வந்து செல்லும் பேருந்துகள் விபரமும் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தால் தென்மாவட்ட மக்கள் இனி மிக எளிதாக சொந்த ஊர்களுக்கு செல்ல முடியும். 


இந்நிகழ்ச்சியில் பங்கேற்க வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு காஞ்சி வடக்கு மாவட்ட திமுக சார்பில் அமைச்சர் தா.மோ அன்பரசன் தலைமையில்  ஆலந்தூர் முதல் வண்டலூர் வரை உற்சாக வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.