Kejriwal Arrest: பாஜக ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவர்கள் உள்நோக்கத்துடன் கைது செய்யப்படுவதாக, அதிஷி குற்றம்சாட்டியுள்ளார்.


அரவிந்த் கெஜ்ரிவால் கைது:


டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியில் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடக்கப்பட்டுள்ளார். அவரது கைதை கண்டித்தும், பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராகவும் ஆம் ஆத்மி பல்வேறு போராட்டங்களை அறிவித்துள்ளது. இந்நிலையில் ஏபிபி சார்பில் நடைபெற்ற ஷிகர் சம்மேளனம் என்ற நிகழ்ச்சியில், டெல்லி அமைச்சர் அதிஷி பங்கேற்றார். அப்போது, டெல்லி முதலமைச்சர் கைது செய்யப்பட்டது, எதிர்கட்சிகளுக்கு எதிராக பாஜகவின் திட்டமிட்ட செயல் என குற்றம்சாட்டினார்.


”ஸ்டாலின் கைது செய்யப்படலாம்”


தொடர்ந்து, ”பணமோசடி தடுப்புச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கங்களை கவிழ்க்கும் பாஜக ஃபார்முலா வெற்றி பெறாததால் இன்று கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார். நாளை மம்தாவை பானர்ஜி, மு.க.ஸ்டாலின், பினராயி விஜயன் என அனைத்து எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதலமைச்சர்களையும் சிறையில் அடைத்து அவர்களின் ஆட்சியை கவிழ்ப்பார்கள். சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை போன்ற அமைப்புகளை பாஜக பயன்படுத்திக்கொள்கிறது.  தேர்தலில் வெற்றி பெறும் மாநிலங்களில் மட்டுமின்றி, தோற்கும் மாநிலங்களில் கூட எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி அமைக்கிறார்கள். பல மாநிலங்களில் ஆபரேஷன் தாமரை நடந்துள்ளது. யார், எப்போது, ​​எங்கு, எப்படி பணம் கொடுத்தார்கள் என்பதை வெளிப்படுத்துவோம். பாஜக குதிரை பேரத்தில் ஈடுபடுகிறது என்பது அனைவரும் அறிந்ததே” என அதிஷி சாடினார்.






கெஜ்ரிவால் தான் முதலமைச்சர்..!


சுனிதா கெஜ்ரிவால் டெல்லி முதலமைச்சராகிறாரா என்ற கேள்விக்கு, “அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்தார், இருக்கிறார் மற்றும் தொடர்ந்து முதலமைச்சராக இருப்பார். அவர் முதலமைச்சராக நீடிக்க வேண்டும் என்று டெல்லி மக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அவர் கைது செய்யப்பட்டதை பற்றிய கவலைகளுக்கு மத்தியிலும், டெல்லி மக்கள் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கின்றனர்.


 


அவர்கள் எங்களை சிறையில் அடைக்க விரும்பினால், பள்ளி வகுப்பறைகள், மொஹல்லா கிளினிக்குகள், டிடிசி பேருந்துகள் ஆகியவற்றிலும் எங்களை அடைக்கலாம். பிரச்னை எங்களின் கொள்கைகள் பற்றியது அல்ல, பிரச்சனை பிரதமர் நரேந்திர மோடி நினைக்கும் எதிர்க்கட்சி தலைவர் என்றால் அது அரவிந்த் கெஜ்ரிவால் தான். அந்த பயம் தான் ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் அனைவரையும் சிறையில் தள்ளியுள்ளது.