கரூர் துயர் சம்பவம் குறித்து பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் வதந்தி பதிவுகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்காளர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என காவல்துறை தெரிவித்தது
கரூர் துயரம்:
கரூர் பரப்புரையில் விஜய்யைப் பார்க்க வந்த கூட்ட நெரிசலில் சிக்கி மூச்சுத்திணறல், மயக்கம் ஏற்பட்டு உயிரிழந்தோர் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது. இது தமிழக அரசியலில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் உண்டாக்கியுள்ளது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, மற்ற அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன், அண்ணாமலை உள்ளிட்டோர் நேரில் சென்றனர். இன்று கரூரில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார்.
போலீசார் வழக்கு
கரூர் பகுதியில் நடைபெற்ற அரசியல் கூட்ட நெரிசல் விபத்து குறித்து எவ்வித வதந்தியையும் யாரும் பரப்ப வேண்டாம். விசாரணை அடிப்படையில் அரசு உரிய நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், வலைதளங்களில் சிலர் பரப்பும் பொய் செய்திகள் பொதுமக்கள் அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் அமைகிறது.
இவ்வாறு, பொதுவெளியில் சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பும் வகையில் செய்திகளை பதிவு செய்த 25 சமூக வலைதள கணக்குகள் வைத்துள்ள நபர்கள் மீது பெறப்பட்ட புகார்களின் பேரில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, பொதுமக்களுக்கு அச்சம் ஏற்படுத்தும் வகையிலும், பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையிலும் யாரும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என்றும், மீறி செயல்படும் நபர்கள் மீது உரிய கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை சார்பாக தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.