கரூர் மாவட்டம் நொய்யல் அருகே உள்ள வேட்ட மங்கலத்தைச் சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 27). இவர் தனியார் சிமெண்ட் குழாய்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் சுமை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பவித்ரா (வயது 21). 7 மாத கர்ப்பிணியாக உள்ளார். பவித்ராவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி வைக்கப்பட்டிருந்தது. இதற்கு தேவையான பொருட்கள் வாங்குவதற்காக வேட்டமங்கலத்தில் இருந்து ஈரோடு மாவட்டம் கொடுமுடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று உள்ளார்.


கொடுமுடியை அடுத்த சோளகாளிபாளையம் அருகே சென்றபோது எதிரே வந்த காரும், பிரேம்குமாரின் மோட்டார் சைக்கிளும் எதிர்பாராத விதமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து பிரேம்குமார் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். உடனே அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே பிரேம்குமார் இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.




தோகைமலை அருகே வெவ்வேறு சம்பவம் 


தோகைமலை அருகே நடந்த வெவ்வேறு மோட்டார் சைக்கிள் விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர். கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள கம்பளியாம் பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 25). இவர் தனது மோட்டார் சைக்கிளில் காளியாம்பட்டியில் இருந்து போத்துராவுத் தன்பட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே துவரங்குறிச்சி நோக்கி திருவையாறு விளங்குடி பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் ஓட்டி வந்த அரசு பஸ் எதிர்பாராத விதமாக மோகன்ராஜ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது.


இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை அடுத்து அவரது உடலை தோகைமலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து மோகன்ராஜ் மனைவி கீதா கொடுத்த புகாரின் பேரில், தோகைமலை போலீசார் பஸ் டிரைவர் ரவி மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மற்றொரு சம்பவம்


தோகைமலை அருகே சங்காயிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் புகழேந்தி (வயது 27). இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருமலை ரெட்டியப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வள்ளக்குளம் வளைவு பாதையில் செல்லும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த புகழேந்திக்கு தலையில் பலத்த படுகாயம் ஏற்பட்டது. இதை எடுத்து அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புகழேந்தி பரிதாபமாக இறந்தார்.


இதை அடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து புகழேந்தி மனைவி சரண்யா கொடுத்த புகாரின் பேரில், தோகைமலை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.