கரூர் வேலாயுதம்பாளையம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் தேங்கிய மழை நீரில் கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், இரண்டு குழந்தைகள் உட்பட 23 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


 


 




கரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மாலை நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. இந்த நிலையில் தேனியில் இருந்து தருமபுரி மாவட்டம் நள்ளம்பள்ளி பகுதியைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட 23 நபர்களுடன் சுற்றுலா பேருந்து புகளூர் வேலாயுதம்பாளையம் அருகே உள்ள கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது மேம்பாலத்திற்கு முன்பாக தேங்கிய மழைநீரில் சுற்றுலா பேருந்து கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. 


 


 




விபத்து நடந்த இடத்தில் அருகில் இருந்த பொதுமக்கள் மற்றும் தகவல் அறிந்த வேலாயுதம்பாளையம் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு படை வீரர்கள் கிரேன் உதவியுடன் விபத்தில் சிக்கிய நபர்களை பத்திரமாக மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 6க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விரைந்து வந்து காயமடைந்த நபர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


 


 




பாலம் அருகே சரியான முறையில் கட்டுமான பணி நடைபெறாததால் மழைநீர் தேங்குவதால் அடிக்கடி மழை காலங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே அதனை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.