கரூர் மாவட்டத்தில் பல ஆயிரம் ஏக்கரில் பயிரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக உள்ள நிலக்கடலை, எள், சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்துக்களை 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை அறுவடை செய்ய அனுமதிக்கக்கோரி சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியிட வேண்டுமென கரூர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவர்கள் கூட்டமைப்பின் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.




கரூர் மாவட்டத்தில் கடந்த 15 ஆண்டு காலமாக போதிய மழை இல்லாத காரணத்தினால் விவசாயம் கடும் பாதிப்புக்குள்ளானது. இந்த நிலையில் இந்தாண்டு இரவை பாசனம் மூலமாக எண்ணெய் வித்து பயிர்களான நிலக்கடலை, எள், சூரியகாந்தி, மக்காச்சோளம் ஆகியவற்றை பல்லாயிரம் ஏக்கரில் விவசாயிகள் பயிரிட்டனர். மயில் மற்றும் கால்நடை தாக்குதலில் இருந்து பயிர்களை விவசாயிகள் பாதுகாத்து வந்த நிலையில் அறுவடை காலம் நெருங்கிவிட்டாலும் ஆட்கள் கிடைக்காததால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நில கடலை நிலத்திலேயே முளைக்கும் தருவாயில் உள்ளது.




எனவே அறுவடை பணிக்கு நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களை (MGNREGS) அறுவடை பணிகளுக்கு பயன்படுத்த தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.  இதற்காக பங்குத்தொகைகளை வழங்கவும் தயாராக உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.  



இது குறித்து வெள்ளியணை ஊராட்சி மன்றத் தலைவரும், கரூர் மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதி சுப்பிரமணி செய்தியாளர்களிடம் கூறுகையில், நடப்பாண்டில் கரூர் மாவட்டத்தில் 15 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலையும், 10 ஆயிரம் ஏக்கரிக் எள்ளும், 8 ஆயிரம் ஏக்கரில் மக்காசோளமும், 5 ஆயிரம் ஏக்கரில் மக்காச்சோளமும், பயிரிடப்பட்டு உள்ளன. இப்பயிர்கள் அனைத்தும் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் ஆட்கள் கிடைக்காத காரணத்தால்  எண்ணெய் வித்துக்கள் நிலத்திலேயே முளைக்கும் தருவாயில் உள்ளன. மேலும், மீதமுள்ள பயிர்களை மயில்கள் கொத்தி விட்டு செல்கின்றன.   



இத்தகைய தருவாயில் வரக்கூடிய சட்டமன்ற கூட்டத்தொடரில் மானிய கோரிக்கையாக எண்ணெய் வித்துக்களை அறுவடை செய்வதற்கு அவசரகால உதவியாக, 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை விவசாயத்திற்கு பயன்படுத்த அனுமதி வழங்கி, கூட்டத்தொடரில் இதுபற்றி அறிவிக்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.