மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் ரூ.6.16 இலட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 22 பயனாளிகளுக்கு ரூ.6,16,209/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் வழங்கினார். இன்றைய கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 356 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 16 மனுக்கள் பெறப்பட்டது.




மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைகள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார். 




அந்த வகையில்  மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 1 பயனாளிக்கு ரூ.4999/- மதிப்பீட்டில் கதொலி கருவிகளையும், 6 பயனாளிகளுக்கு ரூ.1,12,500/- மதிப்பீட்டில் திருமண உதவித்தொகைக்கான ஆணைகளையும், மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் 4 பயனாளிகளுக்கு தலா 1,00,000 வீதம் ரூ.4,00,000  மதிப்பீ:ட்டில் , மாடு வாங்குவதற்கான கடனுதவியும், மற்றும் 1 பயனாளிகளுக்கு பெட்டிக்கடை வைப்பதற்கு ரூ.50,000க்கான கடனுதவியும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பாக 10 பயனாளிக்கு தலா ரூ.48,71/- வீதம் ரூ.48,710/- மதிப்பீட்டில் இலவச சலவைப்பெட்டியையும் ஆக மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.6,16,209/- மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்கள். 




இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், தனித் துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட வழங்கல் அலுவலர் தட்சிணமூர்த்தி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  


இளைஞர் திறன் திருவிழா


தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் ஊரக இளைஞர்களுக்கு தீனதையாள் உபாத்தியாய கிராமின் கௌசல்யயோஜனா மூலம் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு பயிற்சி ஊரகப் பகுதிகளில் சுய வேலை வாய்ப்புடன் கூடிய பயிற்சி மற்றும் இதர பயிற்சிகள் மூலம் ஊரக இளைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகிறது. மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் சட்டமன்றத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி இளைஞர்களின் திறனை மேம்படுத்துவதற்காக திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கும் அரசு துறைகளையும், தனியார் நிறுவனங்களையும் ஒருங்கிணைந்து அனைத்து வட்டாரங்களிலும் "இளைஞர் திறன் திருவிழாக்கள்" நடத்தப்பட உள்ளது. இளைஞர்கள் அதிக வேலை வாய்ப்புள்ள தொழில்களைப் பற்றி அறிந்து கொள்வதோடு, திறன் மேம்பாடு குறித்த விழிப்புணர்வு மற்றும் தகவல்களையும் ஒருங்கே பெறுவதற்கும், திறன் பயிற்சி பெறுவதற்கும் இந்த இளைஞர் திறன் திருவிழாக்கள் பேருதவியாக அமையும் என தெரிவித்துள்ளார்.




அதன்படி கரூர் மாவட்டத்தில் 14.10.2022 அன்று அரசு கலைக்கல்லூரி, தான்தோன்றி மலையில் காலை 8:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை இளைஞர் திறன் திருவிழா நடைபெற உள்ளது. இத்திருவிழாவில் கரூர் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்கள் மற்றும் சென்னை, ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் செயல்படும் திறன் பயிற்சி வழங்கும் நிறுவனங்களும் பங்கேற்க உள்ளன. எனவே ஆர்வம் உள்ள இளைஞர்களும், பெண்களும் தங்களின் கல்வி தகுதிக்குரிய ஆவணங்களுடன் இந்த இளைஞர் திறன் திருவிழாவில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இதில் தெரிவு செய்யப்படுவோருக்கு அவரவர் கல்வி மற்றும் திறனுக்கு ஏற்ப வேலை வாய்ப்புடன் கூடிய திறன் பயிற்சி அளிக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.