மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினார்கள். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் நேற்று வழங்கினார். கூட்டத்தில் ஓய்வூதியம், வங்கிகடன், இலவச வீட்டுமனைப்பட்டா, வேலைவாய்ப்பு, உதவி உபகரணங்கள், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் போன்றவைகள் கேட்டு மொத்தம் 264 மனுக்கள் பெறப்பட்டது. இதில் மாற்றுத்திறனாளிகளிடம் 36 மனுக்கள் பெறப்பட்டது. 




மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகளை கூட்ட அரங்கு வரை அழைத்து வருவதை தவிர்த்து, அவர்களுக்கென்று பிரத்யேக இருக்கைள் அமைத்து அமரவைக்கப்பட்டனர். மாற்றுத்திறனாளிகள் இருக்கும் இடத்திற்கு சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, பெறப்பட்ட  மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய மனுக்களுக்கு இன்றும், பிற மனுக்கள் மீதும் ஒரு வார காலத்தில் துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு தகுதியான பயனாளிகளுக்கு உரிய நிவாரணம் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.





அந்த வகையில் மாற்றுத்திறனாளி நலத்துறை சார்பில் 2 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையும், தலா ரூ.4999/- மதிப்பீட்டில்  4 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.19,996/- மதிப்பீட்டில் காதொலிக்கருவியும், தலா ரூ.7000/- மதிப்பீட்டில் 2 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.14,000/- மதிப்பீட்டில் வீல்சேர், 1 மாற்றுத்திறனாளி பயனாளிக்கு ரூ.12,500/- திருமண உதவித்தொகைக்கான காசோலையும், என பல்வேறு உபகரணங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் வழங்கினார்கள்.





இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் எம்.லியாகத், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மந்திரச்சலம்,  தனித்துணை ஆட்சியர் சமூக பாதுகாப்பு திட்டம் சைபுதின், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.


கரூர் மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 157 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு பணிகள் குறித்தும் அவர்களுக்கு பணித்தளங்களில் ஏற்படும் குறைகளை  நிவர்த்தி  செய்திடும்  பொருட்டு  இரு   மாதங்களுக்கு   ஒரு   முறை மாவட்ட  அளவில் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படும். 





அதன்படி கரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் செயல்படுத்தப்படும்  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணிபுரியும் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு  பணி வழங்குதல், ஊதியம் மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக உள்ள குறைபாடுகளை தீர்க்கும் வகையில் மாவட்ட அளவில் குறைதீர்க்கும் முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இரண்டாம் தளத்தில் உள்ள கூட்டரங்கில்  20.09.2022 அன்று காலை 11.00 மணி அளவில் நடைபெறும். எனவே, கரூர் மாவட்டத்தில் உள்ள  ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் இந்த குறைதீர்க்கும் முகாமில் கலந்து கொண்டு தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெற வேண்டுமென  மாவட்ட ஆட்சித்தலைவர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்கள்.